மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா? 

0
168
#image_title

மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா? 

சென்னை ஆவடி அருகே பெயிண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை பிரிவு அமைத்துள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த பொத்தூரில் உள்ள ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் வயது 32. இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.  இவருடைய மனைவி ரம்யா வயது 26. இந்த தம்பதியினருக்கு  3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் யோகேஸ்வரன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென இரவில் யோகேஸ்வரன் வீட்டுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு படுத்து இருந்த யோகேஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அங்கு அருகில் இருந்த இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ரம்யா, தனது கணவரை விட்டு விடும்படி அவர்களிடம் அழுது கெஞ்சினார். ஆனால் அந்த கும்பல் யோகேஸ்வரனின் மனைவி கண் எதிரேயே, ஒரே அரிவாளையே ஒவ்வொருவராக வாங்கி யோகேஸ்வரனின் கழுத்து, முகம், தலை, இடுப்பு, முதுகு, கை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு அவர்கள் வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் யோகேஸ்வரனின் வீட்டிற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் 2016 ஆம் ஆண்டு யோகேஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான சுறாவை வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது. அதற்குப் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் சுறாவின் மகன்கள் மற்றும் உறவினர்கள் யோகேஸ்வரனை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 உதவி கமிஷனர்கள் மற்றும் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மனைவி கண்ணெதிரிலேயே கணவனை வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.