ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!!
திமுக ஆட்சி வந்த பிறகு அதிகாரிகளுக்கு திமிர் அதிகம் ஆகிவிட்டதாக தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க தவறியதாகவும், படுகொலை செய்யப்பட்ட பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கருக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய வி.பி.துரைசாமி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டியல் இன மக்களின் வீடுகளிலும் தெருக்களிலும் பாஜக கொடி பறக்கிறது என உளவுத்துறை திமுகவிற்கு தகவல் கொடுத்ததால் வரிசையாக பாஜகவை சேர்ந்த பட்டியல் இனத்தவர்களை அடையாளம் கண்டு கொலை செய்கிறார்கள். அமைச்சர்கள் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை இறுதியாக 35 ஆவது இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பேச நேரம் கேட்டால் தருவதில்லை. ஒரு சங்கரை இழந்தது கடைசியாக இருக்கட்டும். இனி யாரையும் இழக்க நாம் தயாராக இல்லை. நாம் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுங்கள்.
சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என மக்கள் சந்தேகம் படுகிறார்கள். அதனால் தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு அளித்தோம். ஜாதிக்கு ஒரு நீதி என இந்த அரசாங்கம் நடைபெறுகிறது. பழைய பாஜக என எங்களை நினைத்து விடாதீர்கள்.
முறையாக விசாரணை செல்லவில்லை என்றால் நாங்கள் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்து நீதி பெற முயற்சிப்போம். அந்த நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள். 100 சதவீதம் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் கெட்டு விட்டது. ஆனால் முதலமைச்சரை கேட்டால் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சொல்கிறார். இந்த ஆட்சி வந்த பிறகு தான் அதிகாரிகளுக்கு திமிர் அதிகம் ஆகிவிட்டது. திமுக என்றால் திமிர் பிடித்த முக வா? என்று கேள்வி எழுப்பினார்