பைக்கில் சென்ற கணவன் மனைவி! கார் மோதி 12 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட அடுத்த கொடூர சம்பவம்! 

0
91

பைக்கில் சென்ற கணவன் மனைவி! கார் மோதி 12 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட அடுத்த கொடூர சம்பவம்! 

டெல்லியில் கஞ்சவாலா என்ற பகுதியில் 20 வயது அஞ்சலி சிங் என்ற பெண் புது வருட தினத்தன்று ஸ்கூட்டியில் தனது தோழியுடன் சென்றபோது கார் மோதி 12 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே புது வருட தினத்தில் உணவு விநியோகம் செய்யும் இளைஞர் ஒரு கிலோமீட்டர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அடுத்த அதிர்ச்சி அலைகளை பரவச் செய்தது. இந்த சம்பவத்தின் வடுக்கள் மறைவதற்குள் ஒரே மாதத்தில் இது போன்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் புறநகர் பகுதியில் பல்சானா என்ற இடத்தில் சாகர் பாட்டில் என்பவர் தனது மனைவியுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பைக் மீது கார் ஒன்று மோதி அவரது மனைவி சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து கிடக்க சாகர் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் சாகர் உயிரிழந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டியவர் தப்பிச் சென்று விட்டார். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் மும்பை, ராஜஸ்தான் என பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவர் சூரத் நகருக்கு செல்வதை அறிந்த போலீசார் காம்ரேஜ் சுங்க சாவடியில் அவரை கைது செய்தனர். பைரன்  லாடுமோர் அஹிர் என்ற கட்டுமான தொழிலதிபர் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

விபத்து குறித்து அவர் கூறுகையில் காரின் அடியில் சாகர் சிக்கியது எனக்கு தெரியாது என்றும் விபத்திற்குப் பிறகு போலீசாருக்கு பயந்து பல்வேறு இடங்களுக்கு தப்பி செல்ல முயன்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.