15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு!

0
52

15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு!

வருகிற ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில், புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக ஏற்கனவே உள்ள எட்டு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சம் நான்கு பேர் வரை ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எட்டு அணிகளும் வீரர்களை தக்கவைத்த பிறகு எஞ்சிய வீரர்களில் இரண்டு உள்நாட்டு வீரர், ஒரு வெளியாட்டு வீரரை புதிய இரண்டு அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்த எட்டு அணிகளும் அவர்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அந்த வகையில் இந்த எட்டு அணிகளில் இருந்து தற்போது வரை 27 வீரர்கள் தக்கவைக்கபட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஐபிஎல் 2022க்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மெகா ஏலத்தில் வீரர்களை பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 17 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1214 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் ஆரம்ப விலை பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின், ரெய்னா, இஷான் கிஷன்,  ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், டுபிளஸிஸ், பிராவோ உள்ளிட்ட வீரர்கள் ரூ.2 கோடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதேப்போல் 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K