வறுமை, தந்தையோ பீடி தொழிலாளி! குடிமை பணி தேர்வில் சாதித்து காட்டிய தென்காசி மாணவி!

கடுமையான வறுமை, தந்தையோ பீடி தொழிலாளி, குடும்ப நிலையை உணர்ந்து குடிமை பணி தேர்வில் அகில இந்திய அளவில் 851 வது இடத்தில் தேர்ச்சி பெற்று மகள் சாதனை புரிந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிடி தொழிலாளரின் மகள் இன்பா. இவர் பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் வீட்டிலிருந்தபடியே குடிமை பணி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார்.

கடந்த இரண்டு முறை தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு அவருக்கு முழுமையான பயிற்சி கிடைக்காததே காரணம்.

இந்த நிலையில், தமிழகம் முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இன்பா முதல் நிலை தேர்ச்சி பெற்றதையடுத்து 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைத்துள்ளது.

இதனை மூலதமாக பயன்படுத்தி முழு முயற்சியுடன் பயின்று மூன்றாவது முறையாக குடிமை பணி தேர்வை எழுதிய இன்பா தேர்ச்சி பெற்றதுடன், அகில இந்திய அளவில் 851 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இன்பா தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வறுமை, குடும்ப சூழ்நிலை இதையெல்லாம் காரணம் காட்டி, என்னால் படிக்க முடியவில்லை என்று வாழ்க்கையை தொலைத்த பல இளைஞர்களுக்கு மத்தியில், விடாமுயற்சியுடன், தமிழக அரசின் உதவியுடனும் பிடி தொழிலாளியின் மகள் இன்பா குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துக் காட்டி இருக்கிறார். இவரின் இந்த வெற்றி பல இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.