யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!!

0
81

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!!

தர்மபுரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று ஆட்டுக் குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பொன்னாகரம் ஆகிய வனப்பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. இந்த கூத்தப்பாடி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கு கடந்த 15 நாட்களாக யானைகள் வந்து தொந்தரவு செய்து வருகின்றது. இந்நிலையில் தரிசக்கிணறு பகுதியில் திடீரென்று வந்த ஒற்றை யானை அங்கு பயிரடப்பட்டுள்ள ராகி, தக்காளி, முருங்கை ஆகிய பயிர்களை சேதப்படுத்தியது.

மேலும் அந்த ஒற்றை யானை அந்த பகுதியை சேர்ந்த பவுனேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி அருகே சென்றது. அந்த ஆட்டுப் பட்டியில் குட்டிகளை எடுத்து வைத்துள்ள குடில்களை தள்ளிவிட்டு மூன்று குட்டி ஆடுகளை தும்பிக்கையால் தாக்கியது. இதில் அந்த மூன்று குட்டி ஆடுகளும் பலியானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களையும் பாலியான ஆட்டுகுட்டிகளையும் பார்த்து ஆய்வு செய்தனர். மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை யானை தாக்கியது. அப்போது அந்த முதியவருக்கு கை உடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கிராமத்திற்குள் வந்து சேதங்களை ஏற்படுத்தும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் படியும், அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும்படியும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.