போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு!

0
69

தமிழகத்தை பொருத்த வரையில் திமுக ஆட்சி பொறுப்பையேற்றத்திலிருந்து சமூகவிரோத செயல்கள், கொலை, கொள்ளை, போன்ற சட்ட விரோதமான செயல்கள் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக் கொள்கிறார்.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் நிலவரம் என்பது வேறுமாதிரியாக இருக்கிறது. அதனை மறைத்து விளம்பரத்திற்காக வீன் பேச்சுக்களை பேசி திரிகிறது திமுக அரசு.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சேர்ந்தவர் பாலச்சந்திரன் இவர் பாஜகவின் எஸ்.சி எஸ்.டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் காவல்துறை சார்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்றிரவு 7. 50 மணியளவில் பாலச்சந்திரன் தனக்கான பாதுகாப்பு காவல்துறை அதிகாரி பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார் அங்கு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இந்த தகவலை அறிந்த கொண்ட சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாலச்சந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் கொலையாளிகள் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது என்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், அந்த பாதுகாப்பையும் மீறி ஒரு முக்கிய கட்சியின் பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.