பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

Photo of author

By Vijay

பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

Vijay

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி 74 வயது அலமாத்தாள், மகன் 44 வயது செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலையில், மூவரது தலைகள் அடித்து நொறுக்கப்பட்டு, அலமாத்தாளின் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், கொலை நடந்த இடம் ஒதுக்குப் புறமாக இருந்ததால் சிசிடிவி காணாமல் போனது, மேலும் எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீஸாரின் விசாரணை சிக்கலாகும் நிலை உருவானது. இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் எந்த முக்கிய தடயமும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், கொலை செய்தது என ஒப்புக்கொள்ளும்படி போலீஸார் பலரை மிரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தெய்வசிகாமணியின் தோட்டத்தில் வேலை செய்த பால்ராஜ் உடல் முழுவதும் அடியுடன் ஆட்சியரிடம் புகார் அளித்ததால் இது அதிக கவனம் பெற்றது. மேலும், சில பட்டியல் சமூகத்தினரை போலீஸார் துன்புறுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனால், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டத்தில் இறங்க, எதிர்க்கட்சிகள் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய கோரிக்கையை முன்வைத்தன.

கொலைக்காரர்கள் யார் என்ற சரியான தடயம் இல்லாததால், ஈரோடு மாவட்டத்தில் 2020 முதல் 2023 வரை நடந்த இதே மாதிரியான கொலை வழக்குகளுடன் இந்த வழக்கை ஒப்பிட்டு விசாரணை செய்யப்பட்டது. ஆனால், அதிலும் முன்னேற்றம் இல்லை. இந்த வழக்கு மீது அரசியல் அழுத்தம் அதிகரிக்க, காவல்துறை இதை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது.

விசாரணை முடங்கிய நிலையில், தெய்வசிகாமணியின் மருமகள் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க திட்டமிட்டதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த காவல்துறை, உடனடியாக ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டு, “8 சிறப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்று அறிவித்தது.

ஆனால், சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, காவல்துறை சரியான கோணத்தில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகே இந்த வழக்கின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.