ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்

போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய அதே நாட்களில் பல்கலைக்கழகத் தேர்வுகளும் நடக்கவுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் சிக்கலை புரிந்து கொண்டு  பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

அறிவியல் உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்சி இயற்பியல் பட்டம் ஆகும். அதனால், எம்.எஸ்சி இயற்பியல் படிப்பவர்கள் இந்த பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே நாட்களில் பல்கலை. தேர்வுகளும் நடப்பதால் ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.

2017ம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும்.

அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும்.” என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Leave a Comment