பொங்கல் திருநாளில் யுஜிசி நெட் தேர்வு!! திமுக மாணவர் அணி கண்டனம்!!

Photo of author

By Gayathri

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஒன்றிய அரசு யு ஜி சி நெட் தேர்வினை அறிவித்திருக்கிறது. இதற்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

ஒன்றிய பா.ஜ.க. அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள “யுஜிசி நெட்” தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து நடத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வானது 2025 ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழர்களுடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவமதிப்பதாக உள்ளது என்றும், ஒன்றிய பா.ஜ.க. அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உலகப் பெருவிழாவினை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அறிவிக்கப்பட்ட “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என திமுக மாணவர் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான தேதிகள் மாற்றி அமைக்கப்படவில்லை எனில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.