பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?

0
75

இந்தியா முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்த தொற்றின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.

இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த நோய்த்தொற்று தினசரி பாதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் சென்று இருக்கிறது. மேலும் ஒருநாள் உயிரிழப்பும் அதி வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றினை தடுப்பதற்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் மற்றும் வார இறுதியில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது..

நாட்டில் சென்ற பத்து தினங்களில் மட்டும் 37 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் இந்த நோய்களினால் பாதித்து இருக்கிறார்கள். உலக அளவில் இதுவரையில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பு, ஆக்சிஜன் குறைபாடு மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாகவும் மேலும் பல கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அதோடு நாடு முழுவதிலும் இந்த நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, இதைவிடக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மினி ஊரடங்கு போல செயல்படுத்தி விடலாமா என்பது தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.