குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதில் இருந்தே நாம் இன்னும் மீளவில்லை. மேலும், இந்த விவகாரம் நடந்து 17 மாதங்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதற்கிடையில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதன்படி அவர்கள் கூறியிருப்பதாவது, “குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிந்த பின்னர் அது மாட்டுச்சாணமா? அல்லது பல நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள பசியா என்பது தெரியவரும். மேலும், தொட்டியை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று அப்பகுதி குடிநீர் ஆபரேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என கூறியுள்ளனர்.
இருப்பினும் தொட்டியின் அனைத்து பகுதியும் சுத்தமாக உள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே இதுபோன்று அசுத்தமாக உள்ளது. எனவே இது பாசியாக இருக்க வாய்ப்பே இல்லை. யாரோ ஒருவர் தான் மாட்டுச்சாணத்தை கலந்திருக்க வேண்டும். பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் திசை திருப்பி வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.