அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி எங்கே? விரட்டி விரட்டி அசிங்கப்படுத்தும் பாமகவினர்
சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் நம்பிக்கையை பெற நினைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது பஞ்சமி நிலத்தை பற்றிய நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசுரன் படத்தினை பார்க்க சென்றிருந்தார்.
அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் அந்த படத்தில் வருவது போல தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் மீட்க வேண்டும் என தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான், முடிந்தால் அதை முதலில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என ஒரு ட்விட்டர் பதிவை போட அது தற்போது திமுகவை நீதிமன்ற வழக்கு வரை இழுத்து வந்துள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கருத்துக்கு பதிலளித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இத்துடன் முரசொலி அலுவலகத்திற்கான பட்டாவை இணைத்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை காட்டிய ஸ்டாலின் அதற்கான மூலப் பத்திரத்தை வெளியிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பான இந்த புகாரை விசாரிக்க, உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்தது. இதனையடுத்து, தேசிய பட்டியலின ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகாமல், அவருக்கு பதிலாக திமுக அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகினார்.

அந்த விசாரணைக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த புகார் பொய் என்று கூறிய அவர், மேலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு 1000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவை யார் பெயரில் உள்ளன என்பது பற்றியும் விரைவில் அறிவிக்க போவதாகவும், மேலும் அவர் மீது முரசொலி விவகாரத்தில் பொய்யை பரப்பியதற்காக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியது போல மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு எதுவும் தொடரவில்லை. அதே போல பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்திற்கான மூலப் பத்திரமும் திமுக சார்பாக வெளியிடப்படவில்லை. விமர்சனம் எழுந்ததும் பட்டாவை வெளியிட்ட ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிட தயங்குவது ஏன்? என்றும் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ் பாரதி எங்கே? என பாமகவினர் மீம்ஸ் போட்டு திமுகவினரை விமர்சனம் செய்து வருகின்றனர்.