சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி தினத்தன்று நாம் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையாக இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
விரதம் கடைபிடிக்கும் நபர்கள் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியாட்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
மேலும் சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மனம் அலை பாய்வதை கட்டுபடுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

விரதம் ஏன்?
நம்முடைய மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே இவ்வாறு விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். மேலும் விரதத்தின் போது உணவை தவிர்ப்பதன் வழியாக உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. இவ்வாறு நாம் தினமும் அனுபவிக்கும் நித்திரை, தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விரதத்தின் போது விலிதிருப்பதின் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு விரதத்தின் போது உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலமாக நாம் சாதாரண விழிப்பு நிலையையும் விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம் என்று கூறப்படுகிறது.
அதாவது சாதாரண விழிப்பு மற்றும் உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக உள்ளதாக கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை.அதனால் இறைவனை உணரும் தன்மையை இழந்து விடுகிறோம்.
இதனால் தான் சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணெய் போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது. இதனால் இறைவனை உணரும் தன்மையை அடைகிறோம்.