“டிராவிட் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்…” நேற்றைய போட்டியில் கலக்கிய சஹால் கருத்து!

0
79

“டிராவிட் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்…” நேற்றைய போட்டியில் கலக்கிய சஹால் கருத்து!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு முதல் ஒருநாள் போட்டியில் த்ரில் வெற்றியை பெற்றது.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் தவானும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகார் தவான் 97 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 305 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 3 ரன்களில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம் கிடைத்த சஹால் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்நிலையில் தன்னுடைய பந்துவீச்சு குறித்து பேசியுள்ள சஹால் “டிராவிட் என் மேல் நிறைய நம்பிக்கை வைத்து ஊக்கப்படுத்தினார். அது எனக்கு உத்வேகம் அளித்தது. இன்னிங்ஸின் இறுதியில் பிட்சில் மாற்றம் இருக்கும் என்பதால் நான் 40 ஓவர்களுக்குப் பிறகு 3 ஓவர்கள் வீசவேண்டும் என முடிவு செய்துகொண்டோம். லெக் பகுதியில் பவுண்டரி தூரம் என்பதால் ஆஃப் ஸைடில் அதிகமாக பந்துகளை வீசினேன்” எனக் கூறியுள்ளார்.