செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..??
பொதுவாக மனிதர்கள் தான் Axe Body Spray போன்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். ஆனால், ஒரு நாட்டில் செம்மறி ஆடுகளுக்கு இந்த Axe Body Spray-வை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அது எந்த நாடு? எதற்காக ஆடுகளுக்கு இதை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
ஆடு வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் பண்ணை முறையில் செம்மறி ஆடுகளை வளர்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு காயம்படும். சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும். எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கவே பிரிட்டனில் உள்ள பண்ணையாளர்கள் ஆடுகள் மீது இந்த வாசனை திரவியங்களை தெளிக்கிறார்களாம்.
இவ்வாறு ஆடுகள் மீது தெளிக்கப்படும் வாசனை திரவியங்கள் அவை சண்டை போடுவதை தடுப்பதாக கூறுகிறார்கள். இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால் இந்த Axe Body Spray-வில் இருக்கும் வலுவான வாசனையானது ஆடுகளுக்கு இடையே சண்டையிடுவதை தூண்டும் ஹார்மோன்களை மறைக்கிறதாம்.
முன்னதாக இங்கிலாந்தில் உள்ள 55 வயதான சாம் என்ற செம்மறி ஆட்டுப்பண்ணையாளர் பேஸ்புக் பக்கத்தில் Axe Body Spray-வை தெளித்தால் ஆடுகள் சண்டையிட்டு கொள்வதை தடுக்கலாம் என்ற செய்தியை படித்துள்ளார். அதனை தொடர்ந்து சாம் இதை அவர் பண்ணையில் முயற்சி செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அன்றில் இருந்து இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்களாம். இந்த செய்தி கேட்கவே வினோதமாக உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.