செம்ம டுவிஸ்ட்… தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாராயணசாமி… அந்த ஒரு தொகுதி யாருக்கு?

0
84
Narayanasamy
Narayanasamy

தமிழகத்தை விட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களம் செம்ம சூடுபிடித்துள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு சேர்த்து வீட்டுக்கு அனுப்பியது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்து விலகி கொள்ள, புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் – திமுக இணைந்து எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அது கடந்த 14ம் தேதி நடந்த ஆய்வுக்குழு கூட்டத்தில் மொத்தமாக வெடித்தது.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வேட்பாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் ஆய்வுக்குழு தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது திமுகவிற்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டனர். இருக்கைகள் வீசப்பட்டன. முன்னாள் முதல்வர் நாராயணசாமியே முயன்றும் ரகளையை கட்டுப்படுத்த முடியவில்லை. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தனை உட்கட்சி பூசல்களையும் கடந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

1. காரைக்கால் வடக்கு – ஏ.வி.சுப்பிரமணியன் (புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்)

2. ஊசுடு – கார்த்திகேயன்

3. கதிர்காமம் – செல்வநாதன்

4. காமராஜ் நகர் – ஷாஜகான்

5. லாஸ்பேட்டை – வைத்தியநாதன்

6. முத்தியால்பேட்டை – செந்தில்குமரன்

7. அரியாங்குப்பம் – ஜெயமூர்த்தி

8. மணவெளி – அனந்தராமன்

9. இந்திரா நகர் -கண்ணன்

10. நெட்டப்பாக்கம் – விஜயவேணி

11. நெடுங்காடு – மாரிமுத்து

12. திருநள்ளாறு – கமலக்கண்ணன்

13. மாஹே – ரமேஷ்

14. ஏம்பலம் – கந்தசாமி

இந்த பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பெயர் இடம் பெறவில்லை. காரணம் அவர் கடந்த முறை போட்டியிட்ட நெல்லித்தோப்பு தொகுதி இந்த முறை திமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் ஒரு தொகுதியை மட்டும் நாராயணசாமிக்காக வைத்துவிட்டு, காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.