மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

0
259
#image_title

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்டம் செந்தலைப்பட்டியில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு.

இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருக்குமானால் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மாவட்டம் செந்தலைப்பட்டியை சேர்ந்த செல்வம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் பழமையான சோலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி வருகிற 15-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த கோவில் திருவிழா கமிட்டி தலைவர் என்ற முறையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மஞ்சுவிரட்டு விழாவை நடத்தினோம். இந்த ஆண்டும் எங்கள் கிராமத்தில் சோலை ஆண்டவர் சுவாமி திருக்கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசாணையில் இடம்பெறாத கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், இந்த ஆண்டு திருவிழாக்களையொட்டி மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருக்குமானால் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

பின்னர் மனுதாரர் கிராமத்தில் குறிப்பிட்ட நாளன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

author avatar
Savitha