இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

0
101

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15) முதல் நேரடியாக விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாதவர்கள் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் வெளியிடப்பட்ட பத்து நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிடுகின்றன.

இதனால், இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களும் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி (இன்று) முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதியில் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆதார் கார்டை வைத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பிப்ரவரி 16ஆம் தேதி புதன்கிழமை காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து தினமும் 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K