இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி

0
65

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி

நேற்று நடந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. கோலி அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இந்தியா நிர்ணயித்த 185 ரன்களைத் துரத்த் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிரடியாக போட்டியை தொடங்கியது. குறிப்பாக அந்த அணியின் லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 6 ஓவர்கள் முடிவில் மழையால் போட்டி பாதிக்கப்பட்டதால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலக்கு 151 ரன்களாக குறைக்கப்பட்டது. ஆனால் மழைக்குப் பின் போட்டி இந்தியா பக்கம் திரும்பியது. இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தோல்வி பற்றி பேசிய பங்களாதேஷ் கேப்டன் ஷகீப் அல் ஹசன் “நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது இதே கதைதான் நடக்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்குகிறோம். ஆனால் நாங்கள் அதை சிறப்பாக முடிப்பதில்லை. இது ஒரு சிறந்த ஆட்டம், அதைத்தான் நாங்கள் விரும்பினோம். கடைசியில் யாரோ ஜெயிக்க வேண்டும், யாரோ தோற்க வேண்டும். அவர் [லிட்டன் தாஸ்] எங்களின் சிறந்த பேட்டர். பவர்பிளேயில் அவர் பேட்டிங் செய்த விதம் எங்களுக்கு அதிக உத்வேகத்தை அளித்தது மற்றும் இங்குள்ள குறுகிய எல்லைகளுடன் இதை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது.

இந்தியாவின் முதல் நான்கு இடங்களைப் பார்த்தால், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அந்த 4 பேரை வீழ்த்துவதே எங்கள் திட்டமாக இருந்தது, அதனால்தான் நாங்கள் டாஸ்கினின் அனைத்து ஓவர்களையும் வீசினோம். துரதிர்ஷ்டவசமாக அவர் விக்கெட்டுகளை எடுக்கவில்லை, ஆனால் அவர் மிகவும் சிக்கனமாக இருந்தார். இந்த உலகக் கோப்பையில் கிரிக்கெட் பற்றி அதிகம் பேசாமல் மிகவும் நிதானமாக இருந்தோம். எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது, அதில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.” எனக் கூறியுள்ளார்.