நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்! 

0
468
#image_title

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்!  

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்தபோது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டார். சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 30. செந்தில்குமார், அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாருக்கு பிறந்த நாளாகும்.   அவர் தனது பிறந்த நாளையொட்டி நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் நண்பர்களுடன் சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூவில் உள்ள உணவு விடுதிக்கு வந்தார்.

அங்கு நள்ளிரவு 12 மணியளவில் ஓட்டலிலேயே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். பிறகு நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார். இதையடுத்து செந்தில்குமார் மட்டும் தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட சென்றதாக தெரிகிறது.

அப்போது அதே ஓட்டலுக்கு  டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த பிரகாஷ் வயது 28 எல்லோரும் தனது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார். அப்போது பிரகாசுக்கும் செந்தில்குமார் இடையே எதிர்பாராமல் தகராறு ஏற்பட்டது. அப்போது பிரகாஷ் செந்தில்குமாரை தாக்க தொடங்கினார். இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே செந்தில்குமாரின் நண்பர்களும் ஓடி வந்தனர்.

இதனால்  இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இந்த சண்டையில்  படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அவரது நண்பர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆனால் அது தெரியாமல் பிரகாஷின் நண்பர்கள் மணிமாறன் மற்றும் ரோஷன் ஆகியோரும் திருமங்கலம் காவல் நிலையத்தில் செந்தில் குமாரும் அவரது நண்பர்களும் தாக்கி விட்டதாக புகார் அளிக்க சென்றனர். அப்போது போலீசாருக்கு வந்த தகவலில் செந்தில்குமார் இறந்து விட்டதால் ரோசனையும் மணிமாறனையும் கைது செய்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் ஆஜரான பிரகாஷ் தான் மட்டுமே செந்தில்குமரை தாக்கியதாகவும் தனது நண்பர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என கூறவும் போலீசார் பிரகாஷை கைது செய்துவிட்டு மணிமாறனையும் ரோசனையும் எச்சரித்து அனுப்பினர்.

செந்தில்குமாரின் நண்பர் மொய்தீன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் பிரகாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிறந்த நாளிலேயே புது மாப்பிள்ளை தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.