மதுர குலுங்க குலுங்க! ஒரே மேடையில் நடக்கப்போகும் மாபெரும் பிரம்மாண்டம்!

Photo of author

By CineDesk

மதுர குலுங்க குலுங்க! ஒரே மேடையில் நடக்கப்போகும் மாபெரும் பிரம்மாண்டம்!

CineDesk

ADMK

ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான கால அவசாகம் குறைவாக உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கொரோனா பரவலின் வேகம் தீவிர எடுத்து வரும் நிலையில் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மாநில கட்சிகளைச் சேர்ந்த அதிமுக, திமுக கட்சி தலைவர்களைத் தொடர்ந்து அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சி தலைவர்களும் விரைவில் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக இறுதி செய்யப்படும் முன்பே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தமிழகம் வந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்தல் களத்தில் பிரசாரமும் ஜோராய் நடந்து வருகிறது.

இந்நிலையில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பாஜக தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளது தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 31ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டி மற்றும் தளி தொகுதியிலும், அதே நாளில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விருது நகர், கோவை தெற்கு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரவக்குறிச்சி வேட்பாளரும், பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். மறுநாளான ஏப்ரல் 2ம் தேதி அன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி மதுரை மற்றும் நாகர்கோவிலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழக பா.ஜ.க., பொறுப்பாளர் சி.டி.ரவி ஏற்கனவே தெரிவித்தார். எனவே மதுரையில் பாஜக மிகப்பெரிய பிரம்மாண்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.