ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!

0
81
BJP-winner comforts OPS! Welcome to your hometown!
BJP-winner comforts OPS! Welcome to your hometown!

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!

அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்து வைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்கு தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதியில் புறப்பட்ட பன்னீர்செல்வம் தரப்பினர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது.
இதையடுத்து தனது மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத் உடன் டெல்லி சென்றார். அங்கு கட்சி தலைமை குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் கசிந்தது. ஆனால் அவரோ, குடியரசுத் தலைவருக்கு போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக டெல்லி செல்வதாக கூறிவிட்டார்.
இதற்கிடையே பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், `ஒருங்கிணைப்பாளர் டெல்லியில் இருந்து வந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஓ.பி.எஸ்-க்கு விமான நிலையம், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கும் வருகை தந்த ஓ.பி.எஸ்க்கு அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.
மதுரை – தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு 4.30 மணிக்கு வந்த அவர் சாஸ்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தனது சுற்றுப்பயணத்தை ஓ.பி‌.எஸ் தொடங்கினார்.‌ தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் கணவாய் பகுதிக்கு வந்தனர்.
மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கணவாய் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் ஏறி ஆதரவாளர்களை சந்தித்து கொண்டே வந்தார்.
அதையடுத்து ஆண்டிபட்டி ரவுண்டா பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாகமாக ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின் தேனி நோக்கி பயணம் மேற்கொண்ட ஓ.பி.எஸ்-ஸை சந்தித்த தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் காவி துண்டு அணிவித்து வரவேற்றார். அப்போது, `நாங்க எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்’ என்றார். அதற்கு ஓ.பி.எஸ் மற்றும் அவரின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் நன்றி தெரிவித்து அங்கிருந்து கிளம்பினர்.
அதன் பின்னர் கண்டமனூர் விலக்கு வழியாக தேனி வந்த ஓ.பி‌எஸ்-ஸை பங்களாமேடு, நேரு சிலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் அவரின் ஆதரவாளர்களுடன் எடப்பாடி அணிக்கு சென்றதால், தேனி நகர், அல்லிநகரத்திலும் ஒபிஎஸ்-க்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. பின்னர் அல்லிநகரம், லட்சுமிபுரம் வழியாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார். முன்னதாக அவரது சகோதரர் ஒ.ராஜா வீட்டிற்கு சென்றார். ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இருந்து ஒ.ராஜாவும் அவரது காரில் உடன்வந்தார்.

காலை மதுரை விமான நிலைத்தில் கிளம்பியபோது அவரது பிரசார வாகனத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் இணைந்திருக்கும் படம் ஒட்டப்பட்டிருந்தது. ஆதரவாளர்கள் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இபிஎஸ் படத்தின் மேல் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் அசாதாரண சூழல் உள்ள நிலையில் நேற்று சொந்த ஊருக்கு வந்த ஓ.பி.எஸ் 3 நாள்கள் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் காலை மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு விமானம் மூலம் சென்னை சென்றார்.