அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

0
47

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா?பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ” வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி , திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களது பதவி பறிக்கப்பட்டுள்ளது .மேலும் , இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக பதவி வகித்துவந்த மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தற்பொழுது திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பதவி வகிப்பார் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

ராஜகண்ணப்பனின் பதவி பறிபோனது எப்படி ?

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதற்கு உதாரணம் தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் . மேலும், ராஜா கண்ணப்பன் அவர்களது அமைச்சர் பதவி மாற்றப்படுவது ஒன்று புதிதல்ல .முதலில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் அவர்கள் சில சர்ச்சைகளில் சிக்கி ‘போக்குவரத்து துறை’ அமைச்சர் பதவியிலிருந்து ‘பிற்பபடுத்தப்பட்டோர் நலத்துறை’ அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி பறிபோக முக்கிய காரணம் முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருந்த ராஜேந்திரன் அவர்களின் சாதி பெயரை குறிப்பிடும் வகையில் “எஸ்சி” என்று கூறி அவரை அவமதித்ததால் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தான் அவர் மீது புகார் நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அவர் பிற்பபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றி ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் பதவியிலிருந்து மாற்றபட்ட பிறகும் அவர் மீது இருந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ராஜகண்ணப்பன் ‘அந்த ராஜேந்திரன் அதிமுக விற்கு நெருக்கமானவர், வேண்டும் என்றே எனக்கு எதிராக சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள், நான் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது, நான் அமைதியாக இருந்தால் கூட என்னை வைத்து சர்ச்சையை உருவாக்குகின்றனர்’
என்று குறிப்பிட்டிருந்தார் .

பின்னர், ராணிப்பேட்டை காந்தி அமைச்சர் வகித்த ‘கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள்’ பதவி ராஜகண்ணப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.அவ்வளவாக அதிகாரமில்லா பதவியை வகித்து வந்த ராஜகண்ணப்பனுக்கு முன் வகித்த பிற்பபடுத்தப்பட்டோர் நலத்துறை பதவியை காட்டிலும் இது சற்று ஹை பட்ஜெட் துறை ஆகும். மேலும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.அந்த வகையில் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்பொழுது திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியானது இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட தங்கம் தென்னரசு அவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

மாவட்ட பொறுப்பு அமைச்சர் பணியை சரிவர செய்யாமல், உள்ளூர் அரசியலில் ஈடுபட்டதே அமைச்சர் ராஜகண்ணப்பனின் பொறுப்பு அமைச்சர் பதவி பறிபோனதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் வருகின்ற லோக் சபா தேர்தல் வரையாவது அவருடைய அமைச்சர் பதவி தப்பிக்குமா என்றால் கேள்வி குறி தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.மேலும் ,இவரின் நிலைமை பார்த்தவர்கள் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதையே நினைவுபடுத்தி பேசி வருகின்றனர்.