State

தமிழ் ஊடகத்தில் முதல் பலியை ஏற்படுத்திய கொரோனா! அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த நோயின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பின் தினசரி தொற்று அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு பணியில் காவல்துறை, தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே நிகழும் சம்பவங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தி சேவையை ஊடகங்களும் களத்தில் நின்று செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் ஊடகத்துறையில் கொரோனா பாதிப்பால் ஒளிப்பதிவாளர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மனைவி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார். இச்சம்பவம் ஊடகத்துறையில் பணியாற்றும் நபர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.