தீபாவளி சிறப்பு பேருந்து..எந்தெந்த ஊர்களுக்கு செல்ல.? எந்தெந்த பேருந்து நிலையம்.?

0
98

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி 20,334 அரசு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் 3-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன், கூடுதலாக 3506 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக 9806 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் ‌.

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும்.

சென்னை கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளன.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து போளூர், திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், செய்யாறு, திருப்பத்தூர், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், நவம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து 4,319 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.