தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக இருந்த வரை அண்ணாமலை ஒரு வரைமுறையுடன் பேட்டி கொடுத்தார். தற்போது மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனிடம் சென்றுவிட்டது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். எனவே தான் பேசும் பேச்சுக்களில் ஒவ்வொரு பாலும் சிக்ஸர் அடிக்கிறார் அண்ணாமலை .
அதிமுக பாஜகவின் கூட்டணியில் உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடனும் பாஜக கூட்டணிக்கு வலை விரித்து வருவதால் அண்ணாமலை தற்போது விஜய் மற்றும் அதிமுக பற்றி பேசுவதை குறைத்துள்ளார். தமிழகத்தை ஆளும் திமுக பற்றியும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி பற்றி பேசுவதென்றால் அண்ணாமலைக்கு அல்வா சாப்பிடுவதை போல். தினமும் தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து திமுகவை கழுவி ஊற்றி வருகிறார் அண்ணாமலை.
திருப்பூரில் அரசு பள்ளிக்கு அருகே மதுபோதை கும்பல் ஒன்று அராஜகம் செய்துவந்துள்ளது. அதை தட்டிக் கேட்க சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளது. திமுக ஆட்சியில் குழந்தைகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள் என எல்லோருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இந்த பிரச்சனைகள் பற்றி எதுவுமே கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்தி வருகிறார். பேசாமல் முழு நேரமாக அவர் நடிக்க சென்றுவிடலாம் என காட்டமாக ஸ்டாலினை விமர்சித்துள்ளார் அண்ணாமலை.