அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

0
144
#image_title

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிடையேயும் நடைபெற்று வருகிறது.

கூட்டணி குறித்து விசிக தலைவர் முன்பே திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக கூறியிருந்தார். குறைந்த தொகுதிகளை வழங்கினாலும் கூட திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார் திருமாவளவன்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ” திமுகவுடன் நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தையில் நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் 3 தனித்தொகுதி ஒரு தொகுதி பொது தொகுதி. ஆனால் 8 முதல் 10 கட்சிகள் வரை உள்ள கூட்டணியில் அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்பதை நாங்கள் அறிவோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்.

‘சிதம்பரம் என் சொந்த தொகுதி’ அந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.. அதில் எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் இடமில்லை.

கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும், ஆந்திராவில் 3 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 3 தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்.

பிஜேபியில் இருந்து அதிமுக பிரிந்து வந்தாலும், பிஜேபி அதிமுகவை விடுவதில்லை, அவர்களை பலவீனப்படுத்துவதிலேயே கவனமாக இருக்கிறது.” என்று கூறினார்.

author avatar
Preethi