ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

0
165
#image_title

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இணையத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்குவதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

2022-2023-ம் ஆண்டு  மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலப்பட்டா மற்றும் விவசாய நிலம் அவர்களின்  பெயரில் இருக்கும் பட்சத்தில் மட்டும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். அவர்களின் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கபட்டிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டவைகளுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு  முதல் முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களின் 10 சதவீத பங்கு தொகை திருப்பி தரப்படும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரை செய்யப்பட்டு விவசாயிகளும் தற்போது தாட்கோ மூலம் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு வேண்டி கோரி விண்ணப்பம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் அவர்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், ‘அ’ பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, காஞ்சீபுரம், மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.  என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.