இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!

0
87

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்தில் 49-வது வார்டுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.

அதன்பின், இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, அவர் சாலை மறியலில் ஈடுபட்டதாக இரண்டாவது வழக்கிலும், ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக கூறி மூன்றாவது வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

இந்த தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் மாதம் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து  ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஏற்கனவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு, “தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

எனினும், நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

author avatar
Parthipan K