குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்

0
195

குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல் 

குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த உத்தரவிற்கு தடைவிதித்து, பான் மசாலா, குட்கா  போன்ற பொருட்களின் விற்பனைக்கு தடை இல்லை என கர்நாடகாவை சார்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாகவும், இளைஞர்களின்  உழைப்புத் திறனை கெடுத்து பணியில் செயல்படாத நிலையையும் , சமூக குற்றங்களுக்கு அடிப்படையாகவும், சுய கட்டுப்பாடு இழந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு அடித்தளமாகவும், மனிதர்களின் கல்லீரல், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உருவாக்கி, மனித வாழ்க்கையை படுகுழியில் தள்ளும் குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் தடை செய்வது கட்டாயம் அவசியமாகிறது.

தமிழக அரசானது ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்கொண்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகம் பரவக்கூடிய போதை பொருட்களான குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு நிரந்தர தடைவிதித்து கொள்கை முடிவெடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.