காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு! 

0
233
#image_title

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு!

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு. பல கோடி ரூபாய் பணம் மாயம், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த அலுவலர் மீது கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார். காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை.

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், பொறியியல் துறையின் நான்கு பிரிவுகளில் சுமார் 1000 மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி என்பதால், அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம் மட்டுமே பெறப்பட்டு மிக குறைந்த கட்டணத்தில் பொறியியல் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் தனித்தனியே தங்கி பயில்வதற்கு விடுதி வசதிகளும் உள்ளன. இக்கல்லூரில் நிரந்தர பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள் இதர பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரியில் வேலை செய்யும் உதவிப் பேராசிரியர்களுக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாக சம்பளப் பணம் முறையாக வழங்கவில்லை என புகார் எழுந்தது மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் கட்டியுள்ள டெபாசிட் பணம் முறையாக திருப்பி அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்தது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் இத்தகைய செயலுக்கு கல்லூரியின் வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த அலுவலர் பிரபு என்பவர் செய்த முறைகேடு தான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கல்லூரியின் அனைத்து கணக்கு வழக்குகளையும் நிர்வகித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளிடம் டெபாசிட் பணம் பெறுவது வழக்கம்.
அவ்வாறு பெறப்படும் பணம் நிரந்தர வைப்பு நிதியாக ( FD) வங்கி கணக்கில் செலுத்தப்படும்.நான்கு வருட படிப்பை படித்து முடித்த பிறகு திரும்பி செல்லும் மாணவ மாணவிகளுக்கு மீண்டும் அந்த பணம் திருப்பி வழங்கப்படும்.

கடந்த பிப்ரவரி மாதமே வழங்க வேண்டிய டிபாசிட் தொகை வழங்கப்படவில்லை என மாணவ மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா வங்கி கிளைக்கு சென்று விசாரித்த பொழுது, கல்லூரியின் வங்கிக் கணக்கில் வங்கி கணக்கில் 401 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

வங்கி கணக்கில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் இருப்பதாக கல்லூரி உதவியியாளர் பிரபு தெரிவித்து வந்துள்ளார் ள்ளார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.

அதாவது கல்லூரி முதல்வர் பெயரில் இருக்கும் மற்றொரு கணக்கிலிருந்த சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, கல்லூரி முதல்வர் ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கிற்கு செலுத்தும் வேண்டுமென, கடிதத்துடன் கூடிய காசோலை ஒன்றை கொடுத்த அனுப்பியதாக பிரபு கொடுத்து பணத்தை மாற்றி உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி முதல்வர் தான் இதுபோன்ற எந்தவித காசோலையும் கொடுக்கவில்லை, கையெழுத்தும் போடவில்லை இது போலியானது என தெரிவித்துள்ளார்.

இதேபோல் கல்லூரியின் பிற வங்கி கணக்குகளையும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு அவற்றையும் விசாரித்த போது கல்லூரியின் பெயரில் உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

வங்கியில் முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் பிரபு பணத்தை எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல்வேறு காலகட்டத்தில், கல்லூரி வங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு நபர்களுக்கு பல லட்ச ரூபாயை பிரபு முறைகேடான முறையில் பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தி இருப்பது கல்லூரி நிர்வாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று கோடியே 80 லட்சம் பல்வேறு வகைகளில் முறைகேடு செய்து பிரபு பணத்தை செலவு செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த நாளில் இருந்து கல்லூரி ஊழியர் பிரபு தலைமறைவாகி உள்ளார்.இந்நிலையில் புகார் அளித்த கல்லூரி முதல்வர் கவிதாவிடம் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கல்லூரி வங்கி கணக்குகளில் பணம் இல்லாததால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, உணவு அளிக்க முடியாத சிரமமும் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகளிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

author avatar
Savitha