பழைய பிரச்சனைகளை மறந்து தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் கார்த்திக் சுப்பராஜ்… உருவாகிறது ஜிகர்தண்டா 2

0
142

பழைய பிரச்சனைகளை மறந்து தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் கார்த்திக் சுப்பராஜ்… உருவாகிறது ஜிகர்தண்டா 2

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் தற்போது 8 ஆண்டுகளை கடந்துள்ளது.

பீட்சா படத்தின் மூலம் தன்னை இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்ட கார்த்திக் சுப்புராஜ் அதன் பிறகு ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’ என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரமின் 60வது படமான மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இதில் விக்ரமுடன் அவரது மகனான துருவ் விக்ரமும் நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் தனது முந்தைய ஹிட் படமான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். இது சம்மந்தமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிகர்தண்டா திரைப்படத்தின் போது படத்தின் தயாரிப்பாளரான கதிரேசனோடு கார்த்திக் சுப்பராஜுக்கு கருத்து மோதல் எழுந்தது. படத்தின் ரீமேக் உரிமம் தொடர்பாகவும் இருவருக்கும் பிரச்சனை எழுந்தது.

இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய இறைவி திரைப்படத்தில் அவரை இழிவுபடுத்தும் விதமாக சில காட்சிகளை வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இப்போது இரு தரப்பும் பழைய பிரச்சனைகளை மறந்து ஜிகர்தண்டா 2 திரைப்படத்துக்காக இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.