Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘பொடித்தூவல்’ – சுவையாக செய்வது எப்படி?

0
57
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘பொடித்தூவல்’ – சுவையாக செய்வது எப்படி?

நாம் உணவில் சேர்த்து வரும் காய்கறிகளில் அதிக சத்து நிறைந்த காய்களில் ஒன்று புடலங்காய்.
இந்த புடலங்காயை வைத்து கூட்டு, வறுவல், சில்லி, குழம்பு என்று பல வகைகளில் உணவு செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் புடலங்காயை வேக வைத்து தாளிப்பில் சேர்த்து வதக்கி உண்பதை கேரளாவில் பொடித்தூவல் என்று அழைக்கிறார்கள்.

இந்த பொடித்தூவலை அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*புடலங்காய் – 1(சிறியது)

*மிளகாய் வற்றல் – 2

*கடுகு – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

*தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

*பச்சை மிளகாய் – 2

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிறிய சைஸ் புடலங்காயை எடுத்து தோல் நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவு. பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் மற்றும் அவை வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து தருவல் கொண்டு தேங்காயை 4 தேக்கரண்டி வரும் வரை துருவிக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவல், 2 மிளகாய் வற்றல் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்துக் கிளறவும். அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அடுத்து பொடித்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி இறக்கவும். இவ்வாறு செய்தால் பொடித்தூவல் ரெசிபி அதிக மணம் மற்றும் சுவையில் இருக்கும்.