ஆஸ்திரேலியாவில் மோசடிக்காரர்கள் சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடியில் சிக்கவைக்கின்றனர். அதில் சிக்கும் மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் பிணைத்தொகை அளிக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளனர். பல சம்பவங்களில் மிரட்டப்பட்ட மாணவர்கள் தாங்கள் கடத்தப்பட்டதைப் போன்று போலியாக ஒளிப்பதிவுசெய்து சீனாவிலுள்ள குடும்பத்தினருக்கு அனுப்பிப் பணம்பெறவேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு 8 சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அவற்றில் ஒன்றில் மீட்புத் தொகையாக சுமார் 2 மில்லியன் டாலர் அளிக்கப்பட்டது.
பொதுவாக அந்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்கள் பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளதாகக் கூறுவர். சீன மொழி பேசும் மோசடிக்காரர்கள், மாணவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் பிணைத்தொகை அளிக்கவேண்டும் என்று மிரட்டுவர். மேலும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு வைத்திருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைத் தவிர்க்க மாணவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், முன்கூட்டியே உதவி நாட வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.