Friday, September 20, 2024
Home Blog Page 4968

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள்

0

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் (23.06.2019) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆனது,

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உச்சநீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர், அதாவது 10 விழுக்காட்டினர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி கூட உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை. இது நியாயமல்ல. இனி வரும் காலங்களிலாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உச்சநீதிமன்ற கொலீஜியம் முன்வர வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 2: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

இந்தியாவில் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் மரபு கடைபிடிக்கபட்டு வருகிறது. இதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி என்பது நீதி வழங்குவது மட்டுமின்றி நிர்வாகத்துடனும் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். இத்தகைய பதவியில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும்போது தான் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளையே நியமிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3: மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் (OBC) இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 16வது பிரிவில் 4ஏ என்ற உட்பிரிவை சேர்ப்பதற்காக 117 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலைப் பணியிலேயே ஓய்வு பெற வேண்டியிருக்கிறது. இந்நிலையை மாற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இந்த பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: சமூகநீதிக்கான சட்ட உதவி மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனர் மருத்துவர் அய்யா மேற்கொண்ட முயற்சிகளால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 2006&ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு, அதற்கடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதேபோல், மத்திய அரசின் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

இந்த சமூக அநீதியைப் போக்கவும், இட ஒதுக்கீடு தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்துடனும் சென்னையில் சமூகநீதிக்கான சட்ட உதவி மையத்தை அமைக்க வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை தீர்மானிக்கிறது. இந்த மையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களும், நீதித்துறை வல்லுனர்களும் உறுப்பினர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.

தீர்மானம் 5: உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் தில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றால் 2897 கி.மீ தொலைவுக்கு சுமார் 50 மணி நேரம் தொடர்வண்டியில் பயணம் செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களால் இது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்க இந்தியாவின் நான்கு திசைகளிலும் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளைகளை அமைக்க வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் 229 ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தென் மாநிலங்களைச் சேர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் 6: சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 06.12.2006 அன்று இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன் பின் 4 குடியரசுத் தலைவர்கள் மாறிவிட்ட போதிலும், இந்த கோரிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348(2) பிரிவின்படி குடியரசுத் தலைவரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்று இந்தி அல்லது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க ஆளுனருக்கு அதிகாரம் உண்டு. இந்தப் பிரிவை பயன்படுத்தி பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதிகள், தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஆணையிட்டிருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த 2010&ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு செல்லும்; ஆனால், ஓராண்டுக்குள் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.

ஆனால், அப்போது ஆட்சியிலிருந்து திமுக அரசு அத்தகைய கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாத நிலையில், உறுதி செய்யப்படாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு தொடருவதாகக் குற்றஞ்சாட்டி அதனடிப்படையில் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதையேற்று இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், அதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8: தமிழ்நாட்டில் திருநங்கையர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள திருநங்கை மற்றும் திருநம்பியர்களின் முன்னேற்றத்திற்காக சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தீவிரமாக ஆதரிக்கிறது.

அதேநேரத்தில் திருநங்கையர்களுக்கு சமூகநீதி வழங்குவதாகக் கூறி, அவர்களை மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவில் தமிழக அரசு சேர்த்துள்ளது. இதனால் திருநங்கையர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் இந்த ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

திருநங்கையர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அதற்கு இணையான இடஒதுக்கீடு அளிப்பது தான் மிகச் சரியானதாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி தமிழக அரசை இக்கூட்டம் கோருகிறது.

தீர்மானம் 9: தமிழகத்தில் பணியாற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே மன அழுத்தத்தைப் போக்க, அவர்களின் கோரிக்கைகளை உயர்நீதிமன்றம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணிமாற்றம் செய்யப்படும்போது அவர்களுடைய விருப்பங்கள் கருத்தில் கொள்ளப் படுவதில்லை. கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படுவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருணை உள்ளவர்கள் மட்டுமே அவர்கள் விரும்பும் இடங்களில் பணிபுரிய முடிகிறது என கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே கவலை கலந்த மனநிலை காணப்படுகிறது. அவர்கள் கடுமையான மனஅழுத்தத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுடைய பணி விதிகள் கடுமையாக இருக்கிறது. ஓவ்வொரு மாதமும் எவ்வளவு வழக்குகள் முடிக்கவேண்டுமென்று வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அந்த நீதிபதிகளின் பதவி உயர்வு தடைபடுகிறது.

சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதிபதிகள் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு அவலமான சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்படுவதாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடையே வருத்தம் நிலவுகிறது. இந்நிலை உடனடியாக மாற்றப்பட்டால் தான் கீழமை நீதிபரிபாலன முறையை வலுப்படுத்த முடியும். எனவே, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி மன அழுத்தத்தை போக்க வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.

தீர்மானம் 10: தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெற்று 15 மாதங்கள் கடந்தும் வெற்றிபெற்றவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பார்கவுன்சில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற 25 உறுப்பினர்களுக்கும் இன்னும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை. தமிழத்தில் முறைப்படி பார்கவுன்சில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட குழுக்கள் தான் பார்கவுன்சில் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் உறுப்பினர்களை அவர்களுக்குரிய அதிகாரத்துடன் செயல்பட உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11: தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ சமூகப் பாதுகாப்பு படை

தமிழகத்தில் பொய், வெறுப்பு, சாதி அரசியல்களால் ஒரு தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர்; பழிவாங்கப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதை முதன்மைக் கடமையாக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கருதுகிறது. அதற்காக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் சமூகப் பாதுகாப்புப் படை என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. காவல்நிலைய அளவில் தொடங்கி மாநில அளவு வரை இந்த அமைப்பின் சார்பில் துணைக் குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சட்ட உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்குவர்.

தீர்மானம் 12: மருத்துவர் அய்யா அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனரும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தந்தை பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக்காக போராடி வரும் சமூகநீதிப் போராளியுமான மருத்துவர் அய்யா அவர்கள் 80 வயது நிறைவு நாள் ஜீலை 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சமூகநீதி நாளாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தீர்மானிக்கிறது. ஜூலை 25&ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை உறுதியேற்றுக் கொள்கிறது.

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

0

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மத்தியில் பாஜக தலைமையிலான அரசும் தமிழகத்தில் அதிமுக அரசும் தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டன. தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று காத்திருந்த திமுகவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இனியும் ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை என்பதால் அடுத்த நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதே போல தற்போதைய நிலையில் அதிமுக ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்து வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளானது திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு அச்சம் தரும் வகையிலான தீர்ப்பை தான் வழங்கியுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத சீமான் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். குறிப்பாக கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த இந்த ஆதரவு தமிழக அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் இணைந்து செயல்பட தேர்தல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் என்பவருடனான ஒப்பந்தத்தை கமலஹாசன் உறுதி செய்துள்ளதாக கூறுகின்றனர். கமல்ஹாசனின் இந்த வியூகம் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் :

கடந்த கால தமிழக அரசியலில் நடிகர்கள் முதல்வர்கள் ஆவதும் மக்களின் விருப்பமான தலைவர்கள் ஆவதும் தமிழ்நாடு கண்ட உண்மை. இதற்கு உதாரணம் அரசியலில் வெற்றி பெற்றவர்களான கருணாநிதி,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மேலும் வெற்றி பெற துடிக்கும் விஜயகாந்த்,சீமான் மற்றும் தற்போது நுழைந்துள்ள கமலஹாசன் போன்றோரையும் கூறலாம். இதுமட்டுமில்லாமல் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தும் அரசியலில் ஜொலிக்க முடியாமல் போன திரைநட்சத்திரங்களும் உண்டு. எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்து உச்ச நடிகர்கள் வரிசையில் இருக்கும் கமலும் ரஜினியும் அரசியல் வானில் பவனி வரத் தயாரானார்கள்.

பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று ரஜினி இன்னும் முழங்கிக் கொண்டே இருக்க தற்போது கமல் மக்கள் நீதி மய்யத்துடன் வந்தே விட்டார். நடந்து முடிந்த மக்களாட்சித் தேர்தலில் தனித்து நின்று வெள்ளோட்டம் பார்த்து முடிவுகள் சாதகமாக உள்ள நிலையில் அடுத்து  உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து நிற்க வியூகம் வகுத்து வருகிறார் கமலஹாசன். அதற்காக பிகே என்ற பிரஷாந்த் கிஷோர் என்ற பிரபலமான அரசியல் ஆலோசகருடன் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பிரகாஷ் கிஷோ(ஜோ)ர் :

பொது மக்களின் மத்தியில் வெகுவாய் அறியப் படாத பெயர் அரசியல்வாதிகள் அனைவரும் அப்பாயின்மென்ட்டிற்காய் காத்திருக்கும் ஒரு பெயர் பிகே என்ற பிரஷாந்த் கிஷோர். 2014 ல் குஜராத்தில் மோடியின் பாதையை மாற்றி தான் வகுத்த திட்டப்படி ராஜபாட்டையில் பவனி வர வைத்த சிறப்புத் தேர்தல் வித்தகர் தான் இந்த பிரஷாந்த் கிஷோர்.

இதனையடுத்து தற்போது நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில்  ஜெகன்மோகன் ரெட்டி மொத்தமாய் வெற்றி வாகை சூடவும் இந்த பிகேவின் லாஜிக்கே காரணம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். தேர்தலில் வெற்றி பெற ஒரு சில கணக்குகள் போதும் என்பது இந்த பிரகாஷின் கருத்து . அவர் கூறிய அந்த கருத்து குஜராத்திலும் ஆந்திராவிலும் வெற்றியை கொடுத்து நிரூபித்துள்ளது.மேலும் பீகாரில் நிதீஷ்குமாருக்கான வெற்றிப் பாதையும் இவர் வகுத்ததே .

திமுகவின் சபரீசனும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் 2021 தேர்தல் வெற்றிக்காக பிரகாஷ் கிஷோரை சந்திக்க வருடக் கணக்காக காத்திருக்க ஒரே மணி நேர சந்திப்பில் ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் தயாரானது கமல் – பிகே இடையேயான ஒப்பந்தம் . இதன் பின்னே இருப்பது கமலின் நண்பர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என்கிறது அரசியல் வட்டாரம் .

மக்களவைத் தேர்தலில் மய்யம் :

பிஜேபியின் B அணி, திமுகவுடன் இணையப் போகிறது என்று பல்வேறு பரப்புரைகள் இருந்தாலும் மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்டார் கமல் . கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்தில் தனித்து நிற்பது முட்டாள்தனம் என அரசியல் ஆரூடம் சொல்ல மக்களின் நாடி பிடித்துப் பார்க்க தனித்து நின்றார் கமல். அனைவருக்கும் தெரிந்த திரைமுகம் என்பது மக்களிடையே செல்ல எளிதாய் கை கொடுத்தது.

மேலும் அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று அருகழைத்துப் போனது.திராவிடக் கட்சிகளின் மாற்றாய் அதற்குள் வர வாய்ப்பிலையெனினும் இருக்கும் இடமறிய உதவியது மக்களவைத் தேர்தல்.பிரகாஷின் திறமை பற்றி அறிந்த கமல் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தை ஒருமணி நேர சந்திப்பில் முடிவு செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் மூன்றாம் இடம்பிடிக்கும் என்று நம்பப்பட்ட நாம் தமிழர்கட்சியை எளிதாய் நான்காம் இடம் தள்ளி அந்த மூன்றாம் இடத்தை மக்கள் நீதி மய்யம் பிடித்தது. இந்த தேர்தலில் 8-10 சதவிகித திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கி பிரிக்கப்பட்டது. விழுந்தது அத்தனையும் முதல் முறை வாக்களிப்போரின் ஓட்டு என்ற நிலை இன்னும் அவர்களின் நம்பிக்கையை வளர்த்தது.

அடுத்ததாக கமல் கவனிக்க வேண்டியவை:

நகர பகுதிகளில் கிடைத்தது போல கிராமப்பகுதிகளில் முந்தைய தலைமுறை இடங்களில் மய்யத்திற்கு சொல்லிக் கொள்ளும்படி வாக்குகள் கிடைக்கவில்லை.வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. மேலும் கமலஹாசன் அளித்த வாக்குறுதிகளை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய செய்ய வேண்டும்.

படிக்க மிக எளிதான நேர்மையான இலவசங்களற்ற நேரடி வாக்குறுதிகள். இவற்றையெல்லாம் சாதிப்பதென்பது எளிதா ? என்பதற்கான விளக்கத்தை கட்சியின் தலைவராய் கடைக்கோடித் தமிழன் வரையில் கொண்டு செல்ல வேண்டும் .

பல நேரங்களில் கமலஹாசன் பேசுவது புரியாது என்பது பலரும் அறிந்தது என்ற நிலையில் மக்களுக்குப் புரியும் எளிதான மொழி உரையாடல் இன்னும் வேகமாய் அவரது கருத்துக்களை கொண்டு செல்லும். எப்படிப் பேசினாலும் புரியவில்லை எனச் சொல்லும் கூட்டமும் உண்டு.கட்சி நிர்வாகிகளும் மக்களிடையே நன்கு அறியப்பட வேண்டும்.

மக்களுடன் இணைந்தே பணியாற்ற வேண்டும்.எடுத்து வைக்கும் காலடிகள் அளந்து வைக்கப் பட்டால் வெற்றி சாத்தியமே. ஆட்சிக் கட்டிலில் அமர பல வருடம் ஆனாலும் மக்களிடையே பலம் மிக்க ஒரு மாற்று வழியாய் எளிதில் உயரலாம் .

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி  அவர்களின் இழப்பும் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான இருவர் இணைந்த இந்த வியூகம் வெற்றியை கொடுக்குமா? என்பதை அறிய காத்திருப்போம் அடுத்த தேர்தல் வரை.

மெல்லக் கொல்லப்படும் நூலகங்கள் – அரசியல் வாதிகளின் அலட்சியமா ? இல்லை அறியாமையா? விரிவான அலசல்

0

மெல்லக் கொல்லப்படும் நூலகங்கள் – அரசியல் வாதிகளின் அலட்சியமா ? இல்லை அறியாமையா ? விரிவான அலசல்

கதையும் வாசிப்பும் :

கடந்த 70 மற்றும் 80 களில் பொதுவாக ஒர் இரயில் பயணத்தில் பயணிக்கும் அனைவரின் கையிலும் வார இதழ்கள், நாவல்கள் அநேகமாக ஏதேனும் அவர்களுக்கு பிடித்த சில தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும். ஆனால் இன்றைய பயணத்தில் கண்ணில் படுவது காதில் மாட்டிய ஹெட்போனுடன் தங்களின் செல்பேசியில் புதையுண்டு போயிருக்கும் மனிதர்களை தான். இதில் வயது வித்தியாசம் ஏதும் இல்லை . நேற்றுப் பிறந்த குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்ட பெரியோர் வரையில் அனைவரும் ஒரே மாதிரி தான் விதிவிலக்காக சிலர் புத்தகங்களுடன் இருக்கலாம்.

சிறுவயதில் கதை கேட்டு வளர்ந்து அதைக் காட்சிப் படுத்தி வளர்ந்த குழந்தையும் இன்றைய ஸ்மார்ட்போன்/டேப்லெட் குழந்தைகளும் ஒப்பிடவே முடியாதவர்கள். திரும்பத் திரும்ப கேட்கும் கதைகள் அலுத்தபின் அக்குழந்தைகள் தானாகவே புத்தகங்களைத் தேடிப் போனார்கள். அவர்களுக்கு வசதியாக ஆங்காங்கே அமைந்துள்ள நூலகங்கள் உதவின. அக்குழந்தைகள் போலில்லாமல் இன்றைய குழந்தைகளுக்கு இணையம் அலுப்பதே இல்லை.

கிண்டிலின் அசுர வளர்ச்சி:

ஒரு தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைத்து முத்தமிடுவதற்கும் ஸ்கைப் காலில் குழந்தையைக் கொஞ்சுவதற்குமான வித்தியாசமே அச்சிடப் பட்ட புத்தகங்களுக்கும் அமேசான் கிண்டில் ஆப்பில் படிப்பதற்கும் இடையேயானது போல தான். இப்போது புகழ்பெற்ற பதிப்பகங்கள் பல தங்கள் புத்தகங்களை நேரடியாய் கிண்டிலும் அச்சிலும் வெளியிடுகின்றன. அச்சிடப்படும் பிரதிகள் பெரும்பாலும் விற்பனையாவதில்லை. கிண்டிலில் வெளியிடப்படும் புத்தகங்கள் உடனே தரவிறக்கம் செய்யப்பட்டு வாட்ஸப் குரூப்களில் அனுப்ப்படுகின்றன. இதற்கு புக் பைரஸி என்று பெயர் . பதிப்பகங்கள் குறைந்தது ஆறு மாத / ஒரு வருட இடைவெளி அச்சுப் பிரதிக்கும் கிண்டில் வெளியீட்டிற்கும் இருப்பின் எழுத்தாளர்களின் உழைப்பிற்கான மதிப்பு கொஞ்சமாவது கிடைக்கும். பதிப்பகங்கள் சிந்திக்குமா ? புத்தகத் திருவிழா கண்காட்சி என்று பெருநகரங்களில் நடத்தப்படுவதென்னவோ உண்மை தான். கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் வாசகனின் நிலை என்ன?

மெல்ல கொல்லப்படும் நூலகங்கள் :

கிராமங்களில் ஏன் நகரங்களிலுமே செலவு செய்து புத்தகங்களை வாங்கி வாசிக்க முடியாத வாசகர்களுக்கென ஏற்படுத்தப் பட்ட அமைப்பே நூலகம். தமிழ்நாட்டில் மொத்தம் 4532 நூலகங்கள் உள்ளன. பாதி அளவு கூட இதில் செயல்படுவதில்லை. மாநில நூலகங்கள் மற்றும் மாவட்ட மைய நூலகங்கள் ஓரளவு புத்தகங்களுடனும் வாசகர்களுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் கிளை நூலகங்களும் கிராமப்புற நூலகங்களே அழிவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறது. இவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 3800 என கணக்குகள் தெரிவிக்கின்றன. பகுதி நேர நூலகங்கள் பெரும்பாலானவை செயல்படுவதில்லை. தமிழ்நாட்டு நூலகங்கள் அனைத்தும் கல்வித்துறையின் கீழ் வருகின்றது. அரசால் இந்த நூலகங்களுக்கு வருடம் ஒன்றுக்கு ஏறக்குறைய 28 கோடி ஒதுக்கப்படுகிறது. நூலக ஆணை ஒன்று பிறப்பிக்கப்படுகிறது .பதிப்பகங்கள் தங்களுடைய அன்றைய வருட பதிப்புகளை அரசின் அனுமதிக்காய் அனுப்பி வைக்கின்றன. இதில் தேர்வு செய்யப்படும் நூல்கள் வாங்கப்பட்டு நூலகங்களுக்கு அரசால் அனுப்பி வைக்கப்படுகிறது. நாம் கட்டும் வரிப்பணத்தில் இருந்தே இந்த நூலக நிதி ஒதுக்கப்படுகிறதென்பதையும் நினைவில் கொள்க.

நூலகத்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் வகுத்தளித்த திட்டங்கள் ஏன் செயல்படுத்தப் படவில்லை . நூலகங்களுக்கான நிரந்தர கட்டடங்கள் ஏன் கட்டித்தரப் படவில்லை. இடிந்த நிலையில் மழை நீர் உள்புகுந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேதமாகிக் கொண்டிருக்கின்றன . சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருது பெற்ற புத்தகங்களுக்கு நூலக ஆணை மறுக்கப் பட்டிருப்பது ஏன் ? இருப்பிட வசதி இல்லாத நூலகங்களை அரசுக் கட்டடங்களுக்கு எப்போது மாற்ற போகிறார்கள்? நிரந்தர நூலகர்கள் பணியமர்த்தப் படாதது ஏன் ? ஏற்கனவே உள்ளவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாய் பதவி உயர்வு தரப்படாததேன் ? இதையெல்லாம் பார்க்கும் போது பேய்கள் அரசால்கையயில் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது தான் நினைவிற்கு வருகிறது.

கம்ப இராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் எனக்கூறும் முதல்வரிடமும்,ஒரு பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாத எதிர்க்கட்சி தலைவரிடமும் இதெல்லாம் எதிர்பார்ப்பது மக்களின் தவறே. இவற்றையெல்லாம் தற்போதுள்ள பதிப்பகங்கள் எல்லாம் ஒன்று கூடி சாதிக்கலாம் . பதிப்பகங்களின் இடையே இருக்கும் உட்பூசல் மறந்து இதற்காக ஒன்று படுவார்களா ? இது சாத்தியம் இல்லையெனில் இக்காலக் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்கள் மட்டுமே தெரியவரும். அனைத்தும் இப்போது கணிணி மயமாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்படுவதால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அச்சுப் பிரதி புத்தகங்கள் மியூசியத்தில் மட்டுமே காணக் கிடைக்கும்.

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட காவிரி தூய்மை,
நீர் மேலாண்மை திட்டம் வரவேற்கத்தக்கவை என்றும் மேலும் காவிரி ஆற்றை தூய்மைபடுத்துவதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் திட்டங்களாக மாற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

மத்திய அரசு நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னோட்டமாக குடியரசுத்தலைவர் உரை அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. மாசுபட்டுக் கிடக்கும் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படுவதைப் போன்று, காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் இராம்நாத் அறிவித்தார். மத்திய அரசின் சார்பிலான இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புனித நதிகளில் ஒன்றாக போற்றப்படும் காவிரி ஆறு அண்மைக்காலமாக கர்நாடகத்தின் கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 148.2 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கவிடப்படுவதாக அம்மாநில அமைச்சரே சட்டப்ப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள அனல்மின் நிலையம், கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை, மால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் காவிரியில் தான் கலக்கின்றன. தொடர்ந்து நொய்யலாற்றின் வழியாக சாயப் பட்டறைக் கழிவுகளும், திருச்சி பகுதியில் மாநகராட்சிக் கழிவுகளும் காவிரி ஆற்றில் சங்கமமாகின்றன. அதன் விளைவாக கும்பகோணம் பகுதிக்கு காவிரி நீர் வரும்போது, அதில் மொத்தம் 52 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குடிநீரைக் குடிக்கும் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறு, நரம்பு பாதிப்பு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் புனித ஆறான காவிரியில் நீராடினால் நோய்கள் தீரும் என்றிருந்த நிலைமாறி, இப்போது காவிரியில் குளித்தால் நோய் தான் ஏற்படும் என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக போராடி வருகிறது. காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்; தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடங்கி காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். இது குறித்து கடந்த மக்களவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்து கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் திட்டத்தைப் போன்று காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பயனாகவே காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், நீர்வளங்களை பாதுகாப்பதற்காக நீர்மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டால் தமிழக மக்களும், விவசாயிகளும் பயனடைவார்கள். அவர்களின் துயரங்கள் ஓரளவாவது தீர்க்கப்படும்.

அதேநேரத்தில் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்து விடக்கூடாது. அவை திட்டங்களாக மாற்றப்பட்டு, அடுத்தமாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் காவிரியை தூய்மையாக்கும் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும். அத்துடன் கோதாவரி & காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதன் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

0

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானியன் பிரதமருக்கு வைக்கும் கோரிக்கை

அன்புள்ள பாரத பிரதமருக்கும், எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாய் பதவியேற்றமைக்கு வாழ்த்துக்கள். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்களுக்கு ஓட்டுப் போட்ட ஒரு சாதாரண வாக்காளன். கடந்த ஐந்து வருடங்களில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறையாவது எங்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நம்புகின்றேன் . உங்கள் பதவியேற்பு விழாவே எங்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

இந்தமுறை நீங்கள் டீமானிட்டைஷேஷன் கொண்டு வந்தால் நாங்கள் கவலை கொள்ள மாட்டோம், எங்களிடம் தான் பணமே இல்லையே ! இந்தமுறை நீங்கள் எங்களுக்காய் தந்த வாக்குறுதிகள் கலர் பேப்பர் சுற்றப்பட்டு கவர்ச்சியாய் காத்திருக்கிறது. நடுத்தட்டு மக்களும் அடித்தட்டு மக்களும் கவலையாய் பாத்திருக்கின்றனர் அந்தப் பரிசை. உள்ளிருப்பது புயலா பூகம்பமா எனத் தெரியவில்லை. வேலைவாய்ப்பும், திறன் வளர்ப்பும் முதலில் காத்திருக்கிறது.

கடந்த இருபது வருடங்களாய் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே போவதாய் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு ? 1990 களில் இருந்து உற்பத்தித்துறை வளர்ச்சிபெறவே இல்லை. பப்புதான் காரணமென்று கைகாட்டாதீர்கள். ஆண்ட அனைவரும் குற்றவாளிகளே. தண்டனை என்னவோ என் போன்ற சாமனியருக்கே. உற்பத்தித்துறைக்கு பதில் சேவைத் துறை வளர்ந்திருக்கிறது. உலகப் பொருட்களை விற்கும் சந்தையாய் பாரதமாதாவை மாற்றிவிட்டீர்கள். மேக் இன் இந்தியா என்று போன தேர்தலுக்குத் தந்த வாக்குறுதியை வசதியாய் மறந்து விட்டு இம்முறையும் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.

நீங்கள் இந்தியப் பிரதமர் என தினமும் 100 முறை சொல்லிக் கொள்ளுங்கள். காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் மீட்டிங் என்று உங்கள் உலகம் விரிந்து விட்டதால் பாவம் எங்களைப் பற்றிய நினைவில்லை. அடிச்சோட்றா சின்ராசு என்று உங்கள் வண்டியைக் கொஞ்சம் உள்நாட்டு கிராமங்கள் பக்கம் திருப்புங்கள். சாமானியனின் அன்றாடத் தேவை அன்றைக்கான உணவும் உறைவிடமும் தானே தவிர யோகா டே இல்லை. வயிற்றுக்கு இரண்டு வேளையாவது சோறிட்ட பின் உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்யலாம். இல்லையேல் எங்களுக்கு சவாசனம் மட்டுமே சாத்தியம்.

வருடத்திற்கு எத்தனை மருத்துவர்கள் பொறியாளர்கள் கல்லூரியிலிருந்து வெளிவருகிறார்கள் தெரியுமா ? அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறதென்று தெரியுமா ? எங்கள் ஆடு மாடுகளை விற்று மனைவியின் கடைசி கிராம் தங்கத்தைக் கூட விற்று ஸ்விக்கியில் வேலை செய்யவா படிக்க வைத்தோம். உங்களின் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் பதில் சொல்லுங்கள்.

அன்புள்ள எதிர்கட்சியினரே ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தோம் தெரியுமா ? நீங்கள் உத்தமர் என்று அர்த்தமல்ல. உங்கள் கரங்களும் கறை படிந்த வையே. அலைக்கற்றை ஊழல், தேர்தலில் பிடிபட்ட பணம் என்று எதையும் மறக்கவில்லை நாங்கள். இந்த வாய்ப்பு கடைசியாய் திருத்திக் கொள்ள தரப்பட்ட வாய்ப்பு. தமிழில் உறுதி மொழி ஏற்கலாம், ஆனால் தமிழ் வாழ தமிழனும் வாழவேண்டுமல்லவா ? பத்து தலைமுறைக்கும் தேவையான சொத்து சேர்த்து விட்டீர்கள் இன்னும் நிறையவில்லை . காலியாய் இருப்பது எங்கள் வயிறும் தான். நினைவிருக்கட்டும்.

இந்தமுறை பத்து சதவீத வாக்குகள் மற்றுமோர் கட்சிக்கு சென்றுவிட்டதை நினைவில் கொள்ளுங்கள். ஓட்டளித்தவர் அனைவரும் முதல்முறை வாக்களித்தவர் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் . எச்சரிக்கை அவசியம். நீங்கள் எதிர்க்கட்சிதானே ஒழிய எதிரிக் கட்சி அல்ல.

இது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சி. இதை நினைவில் வைத்து நல்லாட்சி தருவீர்கள் என்று காத்திருக்கும் ஓர் சாமானியன்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்களாதேசம் வகுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா?

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்களாதேசம் வகுத்துள்ள புதிய வியூகம் கைகொடுக்குமா?

நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை சந்திக்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

டேவிட் வார்னர் (281 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (343 ரன்), ஸ்டீவன் சுமித் (243 ரன்) ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க் எதிரணியினரை மிரட்டுகிறார்கள்.

வங்காளதேச அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் ‘வேட்டு’ வைக்கும் நம்பிக்கையுடன் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. 2 சதம், 2 அரைசதம் உள்பட 384 ரன்கள் குவித்துள்ள ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் தான் அந்த அணியின் முக்கியமானவராக இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டவுன்டானில் நடந்த ஆட்டத்தில் 322 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்த வங்காளதேச அணி ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சு தாக்குதலை திறம்பட சமாளித்து அசத்தியது. ஆனால் இது அதைவிட பெரிய மைதானம் என்பதால் ஷாட்பிட்ச் பந்து வீச்சை எதிர்கொள்வதில் கூடுதல் கவனமுடன் இருப்பார்கள்.

மொத்தத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் சவால் அளிக்க காத்திருப்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் அல்லது ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர்-நிலே, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் அல்லது நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் நாட்டிங்காமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்காற்று வீசும். லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த மைதானத்தில் நடக்கவிருந்த இந்தியா நியுசிலாந்து இடையேயான போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது இந்நிலையில் இன்றும் மழை வர வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிப்பதால் ஆஸ்திரேலியா-வங்காளதேச போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. எந்த இடையூறும் இல்லாமல் போட்டி நடைபெற்றால் வங்காள தேச அணி வகுத்துள்ள வியூகம் கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

#உலககோப்பை2019 #கிரிக்கெட் #ஆஸ்திரேலியா #வங்களாதேசம் 

உலக கோப்பை கிரிக்கெட் |ஆஸ்திரேலியா |வங்காளதேசம்

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

0

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு செயல்பட்டு வருகிறது.  கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத் தொகையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய 30% கேளிக்கை வரியை இந்த  திரையரங்க நிர்வாகமானது  செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது.

 இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் கேளிக்கை வரி 30 லட்சம் ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறி தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து ஒரே நாளில் ஐந்து திரையரங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்ட சம்பவம் திரையரங்கு உரிமையாளா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மட்டுமின்றி சேலம் வந்து செல்லும் வெளியூர் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்காக விளங்கிய இந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கூறுகையில், “மாநகராட்சி தரப்பில் திரையரங்க நிா்வாகத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், திரையரங்க நிா்வாகம் இதனை கவனத்தில் கொள்ளாததால் ஐந்து திரையரங்குகளுக்கு  இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது”என தெரிவித்தது.

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

0

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு திமுகவின் வெற்றியை பறித்தது மற்றும் தற்போது மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சியை பிடிக்க விடாமல் தடுத்தது என திமுகவிற்கு பாமக தொடர் சோதனைகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கடந்த காலத்தில் மைனாரிட்டியாக இருந்த திமுகவிற்கு ஆதரவளித்து ஆட்சியில் தொடர உதவியது குறித்து பழைய நினைவுளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில்
தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு!
என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

பழைய செய்தி தான் -இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக என ஆரம்பிக்கும் அந்த பதிவில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

2006-11 காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சொற்றொடர் மைனாரிட்டி ஆட்சி என்பதாகும். திமுக அரசு பற்றி அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பேசும் போதெல்லாம் மைனாரிட்டி அரசு என்றே விளிப்பார். இது திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஆனாலும், அவரது அரசு ஐந்தாண்டுகள் தாக்குபிடித்தது. அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு தான்.

2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுகவுக்கு 22 இடங்கள் தேவைப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 34 இடங்களிலும், பா.ம.க. 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் ஆதரவளித்தால் தான் திமுக ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை. ஆனால், மத்திய அரசில் திமுகவுக்கு நாங்கள் அமைச்சர் பதவி கொடுத்ததைப் போல நீங்களும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அரசுக்கு ஆதரவளிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், அமைச்சரவையில் யாருக்கும் பங்கு தர திமுக தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான் திமுகவுக்கு பா.ம.க. கை கொடுத்தது. 2006 தேர்தலில் கலைஞரை முதலமைச்சராக்குவோம் என்று கூறி தான் கூட்டணிக்கு வாக்கு கேட்டோம், எனவே திமுகவை ஆட்சியில் அமர்த்துவது தான் சரி என்ற எண்ணத்துடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தேன். அதற்கான ஆதரவு கடிதத்தையும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் ஆளுனரிடம் அளித்தனர். அதனால் வேறு வழியின்றி காங்கிரசும் நிபந்தனையின்றி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது.

ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுகவுக்கும், பா.மகவுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அணியிலிருந்து பா.ம.க. விலகிய போதிலும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.

திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்ததால் பா.ம.க. மீது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூர கோபம் ஏற்பட்டது. ‘‘நீங்கள் மட்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு சில அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் தான் அதை கெடுத்து விட்டீர்கள். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவையில்லாமல் இருக்கலாம். எங்களுக்கு கிடைப்பதையும் தடுத்து விட்டீர்களே நியாயமா?’’ என சில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டனர். ஆனாலும் பா.ம.க. அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த போதிலும், அதன் தவறுகளை சுட்டிக்காட்ட பாட்டாளி மக்கள் கட்சி தயங்கியதே இல்லை. அந்தக் காலத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். அந்தக் காலத்தில் திமுக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆக…. கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதாக இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக உண்மையாக போராடுவதாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கிறேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

0

நாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

நாடாளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் திமுக உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அவர்களுக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைதட்டி அவரை வரவேற்றனர். 

இன்று மக்களவையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் பதவியேற்றனர். அப்போது 38 எம்பிக்களும் தமிழில் உரையாற்றி பதவியேற்றனர். இவர்களது பதவியேற்பு உரையின் இறுதியில் திமுக கூட்டணியை சேர்ந்த எம்.பிகள் ‘’வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு என்றும் முழக்கமிட்டனர். இது போலவே பெரியார் வாழ்க என்று பலரும் தளபதி வாழ்க என்று சிலரும் உரையாற்றினர். அப்போது பாரத் மாதாகி ஜே என முழக்கமிட்டு ஒவ்வொருவருக்கும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கனிமொழி உரையின் போது இறுதியில் பெரியார் வாழ்க எனக் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான தேனி தொகுதி எம்பியான ஓ பி எஸ் மகன் ஓ.பி.ரவிந்தரநாத் குமார் பதவியேற்றார். அவர் பதவியேற்ற போது அவரின் பதவி பிரமாணத்தின் இறுதியில், “வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என மட்டும் கூறினார். ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் பெயரையும், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கூறுவதை தவிர்த்து விட்டு வந்தேமாதரம் மற்றும் ஜெய்ஹிந்த் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். இதனால், பாஜக எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி ஆரவாரமாக உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.

திமுக கூட்டணியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருந்தாலும் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறிவிட்டனர். ஆனால் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் தனி ஒருவனாக பாஜக ஆதரவுடன் கெத்தாக பதவியேற்று தனக்கு பின்னால் பாஜக உள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

0

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

மழை பெய்யும் நாட்களில் சென்னை மூழ்குவதும் கோடை காலத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தில் சென்னை தவிப்பதும் காலம் காலமாய்த் தொடர்வது . 2015 வெள்ளத்தின் போது இன்னும் பத்தாண்டுகளுக்கு சென்னையில் தண்ணீர்ப் பஞ்சமே இருக்காது என்றனர் . நான்காம் ஆண்டே வீதியெங்கும் காலிக் குடங்கள் போராட்டங்கள் .

பள்ளிக்கூடங்கள் முழு வேலை நாளை அரைநாளாய்க் குறைத்துவிட்டன… கைகழுவதற்கும் கழிப்பறை பயன்பாட்டிற்கும் போதுமான நீர் இல்லை . உணவகங்கள் மதிய உணவை நிறுத்தி விட்டன . டிபன் வகைகளை விட சாதம் சாம்பார் ரசம் கூட்டு என்று நீர்ப் பயன்பாடு அதிகமாய் இருப்பதே இதற்குக் காரணம் . ஐடி ஊழியர்கள் வேண்டுமானால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் , மற்ற அலுவலகங்கள் என்ன செய்வது ? மருத்துவமனைகளின் நிலையோ இன்னும் கவலைக்கிடம் . தீர்வுதான் என்ன?

சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார் அமைச்சர் வேலுமணி . தன் வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்பதைத்தான் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று கூறி விட்டாரோ ?

மழையில் வெள்ளத்திலும் கோடையில் பஞ்சத்திலும் அவதியுறுவதுதான் சென்னை மக்களின் தலைஎழுத்தா ? ஆட்சியாளர்களின் சுட்டுவிரல்கள் அமைதியாய் நீள்கின்றன இயற்கையை நோக்கி …இது நிஜமா ? கடந்த வருடம் மழை இல்லாததுதான் இப்பஞ்சத்திற்கு காரணமா ? இல்லை ஆளும் அரசின் திட்டமற்ற நீர்மேலாண்மையா ? செல்வி ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு எல்லா அரசு அலுவலகங்களிலும் இருக்கிறதா ? அரசின் அனுமதி பெற்று கட்டப்படும் எல்லா கட்டங்களிலும் இருக்கிறதா ??? கண்காணிப்பது யார் ? கஷ்டப்படுவது யார்?

சென்னையில் சென்ற வருடம் பெய்த மழையின் அளவு 800 மில்லி மீட்டர் . பெங்களூருவின் மழை அளவு 860 மிமீ . 60 மிமீ வித்தியாசம் இரண்டு நகரங்களிடையே , ஆனால் பெங்களூருவில் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் சென்னையில் மட்டும் எப்படி ? வருடத்திற்கு வெறும் 600 மிமீ மழை பெறும் இராஜஸ்தானில் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் 3600 ஏரிகளை கொண்ட சென்னை மாநகரில் மட்டும் எப்படி ?

ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை விட்டுவிடலாம் இருக்கும் ஏரிகள் ஒழுங்காக தூர் வாரப்படுகிறதா ? குவாரிகளிலில் இருக்கும் நீர் ஏன் ஏரிகளில் இல்லை ? ஒவ்வொரு ஆண்டும் தூர்வார மராமத்துப் பணிகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகள் எங்கு செல்கின்றன?

2015 ல் 300 டிஎம்சி அளவு பெய்த நீரில் பாதி கடலில் கலந்ததாதவே இருக்கட்டும் , மீதித் தண்ணீரை ஏரிகளிலும் குளங்களிலும் சரியானபடி சேமித்திருந்தால் இந்தப் பஞ்சம் வந்திருக்காதே . சென்னையில் மட்டும் 70 கோவில் குளங்கள் உள்ளன. இதோ மழைக்காலம் நெருங்குகிறது . அதற்கு முன் இக்குளங்களும் ஏரிகளும் ஏட்டில் இல்லாமல் உண்மையிலேயே தூர்வாரப்பட்டால் மட்டுமே , ஒவ்வொருவரும் தன் வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி சேமித்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு நீர் இருக்கும் . அரசின் மெத்தனம் களையப்பட வேண்டும் , உடனடித் தீர்வாய் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து மட்டும் மெட்ரோ லாரிகளில் நாள் ஒன்றிற்கு 900 லாரிகள் தண்ணீர் பெறப்படுகிறது . நாம் அழிந்தது மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் அழிக்க ஆரம்பித்து விட்டோம் .

அரசின் நீர் மேலாண்மை, ஏரிகள் குளங்கள் சீரமைப்பு பாதுகாப்பு , மறுசுழற்சி முறை , மழைநீர் சேமிப்பு . நம் அட்சய பாத்திரம் நிரம்பியே இருக்கிறது ஆனால் நாம் ஓட்டைக் குடங்களையே நாடுகிறோம் .

அரசின் பங்களிப்பு மட்டும் போதாது ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையுணர்ந்து இருக்கும் நீரை சிக்கனமாய் செலவழித்தும் இனி வரும் தலைமுறைக்காய் நிலத்தடி நீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பும் செய்ய வேண்டும் . அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டாய நீர் மறுசுழற்சி இருந்தால் மட்டுமே அனுமதி என்ற நிலை வர வேண்டும் . குற்றாவாளிகள் என கை காட்ட ஆரம்பித்தால் தமிழ் நாட்டை ஆண்ட , ஆளும் அனைவரும் தான் . இது தான் வழியென்றறிந்த பின் பின்பற்றத் தயக்கமென்ன … தமிழ்நாட்டு மக்களே செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ?