சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

0
36

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தூக்கிட்ட நிலையில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.அவரது முகத்தில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அவரது பெற்றோருக்கு எழுந்தது.இதனை தொடர்ந்து சித்திராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பிரேத பரிசோதனைக்கு பிறகு சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது உறுதியானது.இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது அவற்றை சென்னைக்கு மாற்ற வேண்டுமென்று அவரது தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் வயது முதுமை காரணமாக இந்த வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் வரை தன்னால் சென்று வர இயலவில்லை.மேலும் வழக்கின் சாட்சியாளர்கள் அனைவரும் சென்னையில் இருக்கின்றனர்.இதனால் இந்த வழக்கை சென்னைக்கு மாற்றி தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இந்த வழக்கில் இருந்து ஹேம்நாத் தப்புவதற்காக விசாரணையை தள்ளிப்போட வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு மனுக்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.இந்த வழக்கில் பாதி விசாரணை மட்டுமே நடந்துள்ளது என்று தெரிவித்த அவர் கூடிய விரைவில் முழு விசாரணையை செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.