மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா?

0
95

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா?

இயக்குனர் பாலா சூர்யா நடிப்பில் உருவாகிவந்த வணங்கான் திரைப்படத்தை இயக்கி வந்தார்.

நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாதி ஷூட்டிங்குக்குப் பிறகு கதையில் குழப்பம் ஏற்பட்டு இயக்குனர் பாலா இப்போது தன் குழுவினரிடம் கதை விவாதம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் இப்போது சூர்யா வணங்கான் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சிவா, இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

சிறுத்தை சிவா படத்தை முடித்த பின்னரே மீண்டும் பாலா படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வணங்கான் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது வணங்கான் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குனர் பாலா மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஏற்கனவே பயன்படுத்திய காட்சிகள் அனைத்தையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் வணங்கான் படத்தை மீண்டும் எப்போது தொடங்குவார்கள் என்றே தெரியாத நிலைதான் உள்ளது.