பிரபல இயக்குநரின் தங்கை மகன் ஹீரோவாக அறிமுகம்!!

0
70

பிரபல இயக்குநரின் தங்கை மகன் ஹீரோவாக அறிமுகம்

தங்கை மகன் ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் உதயா இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களின் சகோதரர் ஆவார் இவர் திருநெல்வேலி, சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது தங்கை மகனான ஹமரேஷ் என்பவர் ரங்கோலி என்ற படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் தன் தங்கை மகன் ஹமரேஷ் குறித்து நடிகர் உதயா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தலைப்புக்கேற்றார் போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான ‘ரங்கோலி’ இன்று திரைக்கு வந்துள்ளது. என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘மாநகரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறு வயதில் நடித்த ஹமரேஷ் இன்று வளர்ந்து நாயகனாக நம்முன் நிற்கிறார். அவர் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு நடிகனாகவும் தாய் மாமனாகவும் நான் வாழ்த்துகிறேன்.

நமது பள்ளி பருவத்தை நினைவுப்படுத்தும் விதமாக உணர்வுபூர்வமான வகையில் ‘ரங்கோலி’ உருவாகியுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை இயக்குநர் வாலி மோகன் தாஸ் உருவாக்கியுள்ளார். இயக்குநர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள வாலி மோகன் தாஸ் தனது முத்திரையை இப்படத்தில் பதித்துள்ளார். படத்தில் நடித்துள்ள ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக மருதநாயகத்தின் ஒளிப்பதிவும் கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசையும் அமைந்துள்ளது. ஆர் சத்தியநாராயணணின் படத்தொகுப்பு ‘ரங்கோலி’ திரைப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது. படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத்தை மிகவும் சிறப்பாக தயாரித்துள்ள திரு கே பாபு ரெட்டி அவர்களுக்கும் எனது மைத்துனர் திரு ஜி சதீஷ்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை இத்திரைப்படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று கண்டு, ரசித்து, வாழ்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல திரைப்படங்களை மக்கள் என்றுமே கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வரிசையில் ‘ரங்கோலி’ அமையும் என்பது எனது நம்பிக்கை. திரையுலகில் நடிக்கவும், ஜெயிக்கவும் திரைப்பட பின்புலம் மட்டும் போதாது, அதற்கு கடவுளின் ஆசியும் மக்களின் ஆதரவும் கட்டாயம் வேண்டும். இவை இரண்டும் ஹமரேஷுக்கு கட்டாயம் அமையும் என்பது உறுதி என்றும் நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.

பள்ளிப் பருவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரங்கோலி படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K