மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை!

0
33

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை!

மனைவி இறந்த விஷயத்தை மறைத்து மகளின் திருமணத்தை நல்ல முறையில் தந்தை நடத்தி வைத்துள்ளார்.

மயங்கி விழுந்த அரசம்மாள்

புதுச்சேரி, வில்லியனூரைச் சேர்ந்தவர் தண்டபானி. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அரசம்மாள் (50). இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களின் இளைய மகளுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நேற்று முன்தினம் அரசம்மாள் மகளுக்கு திருமண சடங்கு செய்ய உறவினர்களை அழைக்க சென்றார். அப்போது திடீரென அரசம்மாள் மயங்கி விழுந்தார்.

உடனடியாக உறவினர்களை அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அரசம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணத்தை நடத்தி வைத்த தந்தை

மனைவியின் இறப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் தண்டபாணி. மகள் திருமணம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக அரசம்மாளின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் வைத்திருக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மனைவி இறந்த விஷயத்தை உறவினர்களிடம் கூறாமல், திருமணத்தை நல்லமுறையில் நடத்தி வைத்தார் தண்டபாணி. திருமணம் முடிந்த பிறகு மகளிடமும், உறவினர்களிடம் மனைவி இறந்த விஷயத்தை கூறினார்.

மகள் திருமணத்திற்காக அமைக்கப்பட்ட பந்தலிலேயே மனைவியின் இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Gayathri