பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!!

0
32
#image_title

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!!

நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எக்ஸ் பக்கம் மூலமாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களின் சாதி பெயரை கேட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று அறிந்ததும் அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணம், செல்போன் முதலியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இரு இளைஞர்களும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தை சேர்ந்த நல்லமுத்து, ராமர், பொன்னுமணி, சிவா, லட்சுமணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் “நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது,

இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.