பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று முதல் போராட்டம்! ஆவின் நிர்வாகம் கடும் பாதிப்பு மக்கள் அவதி!
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் கூறுகையில். பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் கொடுத்தது. அதனையடுத்து தான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது பசும்பால் லிட்டருக்கு ரூ 32 இல் இருந்து 35 ஆகவும், எருமைப்பால் ரூ 41 ல் லிருந்து 44 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த விலை உயர்வானது யானை பசிக்கு சோலை பொறி போன்றதாக உள்ளது என விலை உயர்வு போதாது என்று அப்போதே தமிழக அரசுக்கு நாங்கள் தெரியப்படுத்தினோம்.
குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ 1௦ உயர்த்தி தரும்படி கோரிக்கை விடுத்தோம் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ 42, எருமை பால் ரூ 51 வழங்கும் படி கேட்டிருந்தோம். இருப்பினும் லிட்டருக்கு ரூ 3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடந்த ஒன்றாம் தேதி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டாம்.
ஆனால் அந்த கோரிக்கை மீதி எந்த தீர்வும் காணவில்லை. அதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால் இன்று முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினிற்கு இன்று முதல் பால் அனுப்பப்பட மாட்டாது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பால் ஆவின் நிறுவனத்தின் பால் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகின்றது. தமிழக அரசு மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.