இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயணிகள் ரயில் ஒன்று திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ஒப்ருசில ரயில்கள் தாமதமாக கிளம்பும் என்ற ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த விபத்து குறித்தும், சிக்னல் செயல்படாதது ஏன் என்பது குறித்தும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக பயணிகள் ரயிலின் டிரைவரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடவடிக்கை என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்வாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்
புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி அன்பு ரஜினி (வயது 35), காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் மீது புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், புதுவை மாநில எல்லையையொட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது.
இந்தநிலையில் ரவுடி அன்பு ரஜினி நேற்று இரவு காலாப்பட்டு பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு தனது நண்பர்கள் 4 பேருடன் சென்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் காரில் நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதி, சாலைத்தெரு வீதி சந்திப்பில் அவரது காரை பின்தொடர்ந்து வந்த 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கார் மீது திடீரென 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
உடனே உஷாரான அன்பு ரஜினி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் 4 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அப்போது அன்பு ரஜினியை சுற்றி வளைத்த அந்த கும்பல் அவருடைய தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். அதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரவுடியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக் கொண்டு வரப்பட்டது. அந்த நாய் அங்கு மோப்பம் பிடித்தபடி அருகில் உள்ள பாரதிதாசன் வீதி-சின்னசாமி முதலியார்வீதி சந்திப்பு பகுதிக்கு சென்று நின்றுவிட்டது.
உடனே அந்த பகுதியில் போலீசார் தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு குப்பைத்தொட்டிக்கு அருகே ஆன்லைன் நிறுவனம் மூலமாக உணவு வழங்குபவர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு பெரிய பையில் தவிடு வைக்கப்பட்டு வீசப்பட்டு கிடந்ததையும், அதன் அருகிலேயே ரத்தக் கறையுடன் ஒரு கத்தியும் கிடந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர்.
ரவுடி அன்புரஜினியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பிச் சென்ற கொலையாளிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுவையில் கடந்த 6ந்தேதி முன்விரோதத்தில் அரியாங்குப்பம் பகுதியில் ரவுடி பாண்டியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் குற்றவாளிகள் நேற்று தான் பிடிபட்டனர். இந்த நிலையில் அதற்குள் மீண்டும் ஒரு ரவுடி படுகொலை சம்பவம் நடந்துள்ளது போலீசாருக்கு சவாலாக அமைந்துள்ளது.ஆங்காங்கே அடிக்கடி நடைபெறும் படுகொலை சம்பவங்களால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை
சென்னையில் நேற்றிரவு முதுமை மற்றும் உடல்நலக்கோளாறால் காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் அவர்களுக்கு சென்னையில் உள்ள திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்றிரவு காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்
இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் அவர்கள் டி.என்.சேஷனுக்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “1996ம் வருடம் தமிழ் மாநில காங்கிரஸ் தனியாக பிரிந்த நேரம், தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அந்த கட்சிக்கு சின்னம் கொடுத்து அங்கீகரித்தவர் டி என் சேஷன் அவர்கள் தான்
அதேபோல் வைகோவின் மதிமுக பிரிந்த போது, திமுக கட்சி சின்னம் முடக்கப்பட்ட பொது அதை காப்பாற்றி உதவி செய்தவர் இதே டி.என். சேஷன். எனவே அவருக்கு பெரும் நன்றிக் கடன் பட்டுள்ள திமுக, அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறினார். கராத்தே தியாகராஜனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை சமீபத்தில் அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
பாஜகவுடன் முதல்வர் பதவிக்கான பிரச்சனைகள் இருந்ததால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வந்தால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்கள் கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து சிவசேனா வெளியே வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் இன்று திடீரென அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியை நிரந்தரமாக முறித்து கொள்ள சிவசேனா முடிவு செய்துள்ளது என்பது உறுதியாகிறது
பாஜகவின் மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வருவது உறுதி செய்ததை அடுத்து தற்போது அக்கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
மகாராஷ்டிரா ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து இருப்பினும் சிவசேனா ஆதரவு இல்லாமல் அம்மாநிலத்தில் பாஜகவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. எனவே பாஜக ஆட்சி கவிழ்ந்ததும், சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்றும் அக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுவதால் மகாராஷ்டிராவில் திடீர்திருப்பம் ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.
இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 11, 1996ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த அவர் ஐ.ஏ.எஸ் படிப்பை முடித்து கடந்த 1989ஆம் ஆண்டு 18 வது மத்திய அமைச்சரவை செயலாளராக பணி புரிந்தார். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்ற பின்னர் தனது பதவி காலங்களில் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
டி.என்.சேஷன் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தபோதுதான் வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்ற வழக்கத்தையும் கொண்டு வந்தார்.
மேலும் இவர் தேர்தல் கமிஷனராக பணிபுரிந்தபோது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் செய்யும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தார். மேலும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை தேர்தல் வாக்கு சாவடிக்கு அழைத்து வருவதையும் தடுக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தலைமை தேர்தல் கமிஷனராக ஓய்வு பெற்ற பின், 1997ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல் 1999ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார்.
டி.என்.சேஷன் அவர்கள் தனது சிறப்பான பணிகளுக்காக ராமன் மகாசேசே. அமெரிக்காவின் ஹவார்டு பல்கலையில் பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனுக்கான மாஸ்டர் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
பாமகவை பின்பற்றிய திமுக பொதுக்குழு தீர்மானம்! மு.க.ஸ்டாலின் முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்,. கூட்டத்தில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முக்கிய பிரமுகர்கள் முக்கிய நிர்வாகிகள் உட்பட 4400 பேர் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்,.கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் விதிகளில் சட்ட திருத்தம் குறித்தும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின்:
திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் சதி செய்கின்றன என்வும் திமுகவினர் இடையே ஒற்றுமை இல்லாவிட்டால் நாம் வெற்றி பெற முடியாது, திமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்படும் வேண்டும் என்று பேசினார்,. மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனறு அறிவுறுத்தினார்.
தலைவர் கலைஞர் போல் எனக்கு பேசவும் எழுதவும் தெரியாது! ஆனால், அதை முயற்சி செய்யும் துணிவு எனக்கு உண்டு என்றும் தெரிவித்தார்!
கூட்டத்தில் பல அதிரடி சீர்திருத்தங்களை திமுக செய்தது, கட்சியின் மிக முக்கிய பொறுப்பான ஒன்றியக் கழகச் செயலாளர் பதவியை, முக்கியமாக பாமக பின்பற்றிவரும் ஒன்றியச் செயலாளர்கள் முறையை திமுக பின்பற்றியுள்ளது! அதாவது 10 ஊராட்சி அமைப்புகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைக்கப்படும் என்று அதிரடியாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.
இதன் நோக்கம் மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும் தனது சாதியை சேர்ந்தவர்களுக்கும் ஒன்றிய செயலாளர் பதவியை வழங்குவார்கள், பல ஆண்டுகளாக ஒரே நபர் ஒன்றிய செயலாளர் பதவியை அலங்கரித்து வருவதாக திமுகவில் ஏற்கனவே அதிருப்தி தொண்டர்களிடையே இருந்து வருகிறது,. இதற்கு முடிவுகட்டவே இந்த முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது,. இந்த முடிவின் மூலம் திமுக தொண்டர்களும் உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சிதான் தனது கட்சியின் ஒன்றிய செயலாளர் பதவியை ஒரு ஒன்றியத்துக்கு மூன்று நபர்களை நியமிக்கும்,. அவர்களுக்கு 10 முதல் 15 ஊராட்சிகள் மட்டுமே ஒதுக்கப்படும்,. இந்த நடைமுறையை திமுகவும் பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது,. இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து பதவிகளை கொடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும் என திமுக நம்புகிறது. மேலும் இளைஞரணி வயது வரம்பு அதிகரிப்பு. திருநங்கைகளுக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை,. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உறுப்பினர் ஆகும் வசதி,. பாஜகவை போல் இணையதளத்தில் உறுப்பினராகும் வசதி போன்றவை திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன,.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
2020ம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது.
வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்.
10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைக்கப்படும்.
திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம்.
இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் கொண்டு வருவது
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது.
இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை மட்டும்.
மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம்.
பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்.
அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.
*மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்
அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பொதுச்செயலாளரிடம் இருந்த அதிகாரத்தை தனது வசப்படுத்தினார் மு.க.ஸ்டாலின், கட்சியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் நீக்கலாம் என்ற விதிமுறையை திருத்தி கட்சித் தலைவருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,.
2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இன்னும் பல அதிரடி சீர்திருத்தங்களை மு.க.ஸ்டாலின் செய்வார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்துக்களுக்கு சொந்தமான இடம் எனவும் அதில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி(92) அவர்கள் இரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு இன்று வழங்கியுள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
1990-ம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரை அயோத்தியில் உள்ள இராமர் பிறந்த இடத்தில் சிறப்பான முறையில் இராமர் கோவில் கட்டுவதற்கான வழிவகையை இந்த ஒருமனதான தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய விடுதலை இயக்கத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இயக்கமான ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு எனது பணிவான பங்களிப்பும் இருக்க கடவுள் வாய்ப்பளித்ததை எண்ணி மனநிறைவு அடைகிறேன்.
காலம் கடந்து கொண்டே வந்த இராமர்கோயில்-பாபர்மசூதி விவகாரம் இன்றோடு முடிவடைகிறது. வேற்றுமைகளையும், கசப்புணர்வுகளையும் புறந்தள்ளிவிட்டு சமூகஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய நேரம் நமக்கு வந்துள்ளது என எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு அதிக ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்த திமுகவினர்! நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ், அதன் சார்பாகப் போட்டியிட்ட சென்னையில் இருந்தாலும் மண்ணின் மைந்தன் என்று சொல்லி தனது செல்வாக்கு மூலம் போட்டியிட்ட ரூபி மனோகரன் அவர்கள் தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்து களம் இறங்கிய அ.தி.மு.க வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் 30 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்,. வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்று முடிந்துவிட்டது,.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு திமுகவினர் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை, ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பல நிர்வாகிகள் செயல்படாமல் இருந்துவிட்டார்கள் எனவும், ரூபி மனோகரன் அவர்களால் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை செலவழிக்காமல் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் திமுக மீது காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆகும்.
தோல்வி விரக்தியில் இருந்து இன்னும் மீளாத திமுக மற்றும் காங்கிரஸ், நாங்குநேரி தொகுதியில் திடிரென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், அம்மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,. ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘நாங்குநேரி இடைத்தேர்தலில் களக்காடு பேரூராட்சியில் அ.தி.மு.க-வுக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்த தி.மு.க பிரமுகர்கள் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், சிவபத்மநாபன், வஹாப் ஆகியோருக்கு நன்றி’ என குறிப்பிட்டு இருக்கிறது.
போஸ்டரில் குறிப்பிட்டிருக்கும் நபர்கள் திமுக நெல்லை மாநகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், மேற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் ஆகியோர் தான்,. இடைத்தேர்தலின்போது களக்காடு பேரூராட்சிக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை குறிப்பிட்டு குற்றச்சாட்டு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, இதற்கு பின்னால் அம்மாவட்ட அமைச்சர் சொல்லி தான் அதிமுகவினரே இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர் என்றும் திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்,.
தோல்வி குறித்து திமுகவினர் வழக்கம்போல், ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தார்கள் என்றும் அவர்களுக்கு ஈடு கொடுக்க எங்களால் முடியவில்லை இதனால்தான் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பேரூராட்சியில் தங்களால் அதிகம் வாக்குகள் வாங்க முடியவில்லை என்று புலம்புகின்றனர்.
இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இம்மாவட்டத்தை கலக்கி வருகின்றன,. அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு சமூக வலைத்தள வாசிகள் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது,. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சரும் தற்போதிய பாஜக சட்டமன்ற தலைவருமாகிய தேவேந்திர பட்னாவிஸ்ஸை மீண்டும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் பாஜக 105 இடங்களிலும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றது,. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை தங்களுக்கு வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறது சிவசேனா கட்சி,. இதற்கு பாஜக மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை,. ஆட்சியில் வேண்டுமானால் சரிசமமாக பங்கு தர ஆய்வு செய்யப்படும்,. ஆனால் முதலமைச்சர் பதவி தர முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டது பாஜக தரப்பு,.
இந்த சூழ்நிலையில் சிவசேனா தரப்பு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து முதலமைச்சர் பதவியை அடைந்து விடலாம் என்று எண்ணியது,. ஆனால் இதற்கு தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டது, மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமரதான் வாக்களித்தார்கள் தவிர ஆட்சியில் அமர வாக்களிக்கவில்லை என்று அதன் தலைவர் சரத்பவார் வெளிப்படையாக பேசியது சிவசேனா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது,.
இத்தகைய சூழ்நிலையில் நேற்று முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்,. இன்றுடன் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைய உள்ளதால் விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எண்ணிய நிலையில் சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,.
இது மிகப்பெரிய தவறுதலான அரசியல் பார்வையை கொண்டு வந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,. எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தை தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்கச் செய்ய தயாராகி வருகின்றன.
ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்து ஊடகங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி குறித்த செய்தி என்றால் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவர் அளித்த 2 பேட்டிகளும் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக அவர் கூறிய ’தமிழகத்தில் இன்னும் ஆளுமையான தலைவருக்கான வெற்றிடம் உள்ளது’ என்பது அனைத்து அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்களும், முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் முக ஸ்டாலின் அவர்களும் ரஜினியின் இந்த பேட்டியால் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த பேட்டி குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறும்போது ’ரஜினிகாந்த் தனது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இம்மாதிரி பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் நடித்த ’தர்பார்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே போல் அவருடைய இன்னொரு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 படங்களுக்காகதான் அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். மற்றபடி அவர் கூறுவது போல் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் இல்லை என்று கூறினார்
முன்னதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’அரசியல் என்பது தொழில் அல்ல என்றும், பல ஆண்டுகாலம் வேறொரு தொழிலில் இருந்துவிட்டு பின்னர் அந்த தொழிலிலிருந்து அரசியலுக்கு வரலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர். அந்த கனவு பலிக்காது என்று தெரிவித்திருந்தார்