சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை – சசிகலா!!
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அனைவராலும் முன்மொழியப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா பின்னர் நடந்த குளறுபடியால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்தார்.
அதன் பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி அதிமுகவை ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என பலமுறை கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநில ஆளுநருடன் அரசு மோதல் போக்கை கைவிட்டு விட்டு மக்களுக்கு நற்பணிகளை செய்திட முன் வரவேண்டும், சட்டசபையில் ஓபிஎஸ் இட விவகாரம் தொடர்பாக திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
அதிமுக தற்போது செயற்குழு கூட்டம் நடத்தினாலும் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது, கொடநாடு வழக்கில் ஆளும் திமுக அரசு தேர்தலுக்காக நாடகம் நடத்தி வருகிறது. சட்டமன்றத்தில் இருக்கைக்காக அதிமுக சண்டை போட்டு கொள்வது சரியல்ல இதனால் சரியான எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது இருந்த சட்டசபை தற்போது இல்லை.
சாதி பார்த்து அரசியல் செய்வதாக இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி இருக்க மாட்டேன், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல் படுவார்கள் என சசிகலா கூறினார்.