சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

0
191
#image_title

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

தென்னிந்திய புகழ்பெற்ற பல்வேறு கோவில்களுள் ஒன்று தான் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகை தருவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜை நடைபெறும் நாட்களில் மட்டும் நடை திறக்கப்படும். இந்த பூஜையானது 5 நாட்கள் நடக்கும். அதன்படி, நாளை(மார்ச்.,13) மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படவுள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பங்குனி உத்திரம் திருவிழா

இதற்கிடையே வரும் 25ம் தேதி பங்குனி உத்திரம் வருகிறது. ஆண்டுதோறும் இந்த பங்குனி உத்திர திருவிழாவானது மிக விமர்சையாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் அதனை கொண்டாடும் விதமாக சிறப்பு பூஜைகள் செய்யப்படவுள்ளது என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதனையொட்டி வரும் 14ம் தேதி முதல் தினமும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. இந்த பூஜையானது தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் நடக்கவுள்ள நிலையில், வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கும்.

10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா

இந்த பங்குனி உத்திர திருவிழா மிக கோலாகலமாக படி பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளோடு நடத்தப்படும். உச்ச பூஜையாக உத்ஸவ பலி நடக்கும் என்பது குறிப்பிடவேண்டியவை. அதே போல் திருவிழாவின் கடைசி தினமான மார்ச் 25ம் தேதி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும். அதனோடு அன்று இரவே திருவிழா கொடி இறக்கப்பட்டு கோவில் நடையும் அடைக்கப்படும்.

அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஆராட்டு விழாவானது பெண்களுக்கு மிகவும் உற்சாகம் தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் இந்த பம்பை ஆற்றில் நடக்கும் இந்த விழாவில் அனைத்து வயது பெண்களும் எவ்வித கட்டுப்பாடுமின்றி கலந்துக்கொண்டு சாமியை தரிசிக்கலாம். மேலும், இந்த திருவிழா முன்னேற்பாடுகள் அனைத்தும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைமையில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்துக்கொண்டு சாமியை தரிசிக்க முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.