மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்!

0
56

 

மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்

 

மேடையில் கால்பந்து வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

கடந்த ஜூலை 20ம் முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை மகளிருக்கான 9வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

 

இப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஸ்பெயின் வீராங்கனைகளும், ஸ்பெயின் நாட்டு மக்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இதனையடுத்து, மேடையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஸ்பெயின் வீராங்கனைகள் அனைவரையும், அந்நாட்டின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் கட்டியணைத்து பாராட்டினார். அப்போது, ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசோவை கட்டியணைத்து பாராட்டிய லூயிஸ் ருபியாலெஸ், திடீரென அவர் உதட்டில் முத்தமிட்டார்.

 

தற்போது, இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் பேசுகையில், என் அனுமதி இல்லாமல் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் முத்தமிட்டு, அப்படி நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை என்றார்.

 

மேலும், ஸ்பெயின் நாட்டு அமைச்சர், லூயிஸ் நடந்துகொண்ட விதம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

 

இதனையடுத்து, லூயிஸ் ருபியாலெஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு தெரிவித்துள்ளார். ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி உற்சாகத்தில் நான் அப்படி நடந்து கொண்டேன். இதில் எந்த உள்நோக்கம் இல்லை. என் செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

author avatar
Gayathri