இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

0
72

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக நாட்டில் குறைந்து வந்திருந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தொற்று பரவல் காரணமாக கடந்த 3-ஆம் தேதியிலிருந்து 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு மூன்றாவது டோஸாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஜனவரி இறுதிக்குள் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த வயது சிறார்களுக்கு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கும் என தெரிவித்ததோடு, இந்த வகை வயதினருக்கு தடுப்பூசி செலுத்தி முடித்தவுடன் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் மாதத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K