மக்களின் தேவையை அறிக்கையாக வெளியிட்ட‌ மருத்துவர் ராமதாஸ் செயல் படுத்துமா மத்திய மாநில அரசுகள்

0
76

மக்களின் தேவையை அறிக்கையாக வெளியிட்ட‌ மருத்துவர் ராமதாஸ் செயல்படுத்துமா மத்திய மாநில அரசுகள்

கொரோனோ வைரஸ் நோய் பரவாமல் தடுக்க இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை தினம் தினம் எடுத்து வருகின்றனர். இதில் முக்கிய அம்சமாக மக்கள் அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்தும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக மருத்துவர் ராமதாஸ் விரிவான அறிக்கையை அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுளதாவது :
மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பொருளாதாரம் மிகவும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தானி, மகிழுந்து உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் இயக்கம் கிட்டத்தட்ட முடங்கி விட்டது. இதனால் அதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் அனைவரும் உணவு மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே சிரமப்படும் நிலையில், அவர்களால் வாகனக் கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவது என்பது எந்த வகையிலும் சாத்தியமற்ற விஷயமாகும்.

அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் ஏற்கனவே வாங்கியுள்ள பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை அடுத்த சில மாதங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, அவற்றை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும். அதேபோல், காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், குழந்தைகளுக்கான பள்ளிக்கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதுடன், வங்கிக் கடனும் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K