பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

0
281
#image_title
பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி .
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாஜக எம்பி மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மல்யுத்த வீரர்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் குறித்து மல்யுத்த வீரர் விக்னேஷ் போகாட் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இங்கேயே சாப்பிட்டுவிட்டு உறங்க உள்ளோம். கடந்த மூன்று மாதங்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை தொடர்புகொள்ள முடியவில்லை. விசாரணை குழுவினரும் முறையாகப் பதில் கூற மறுக்கின்றனர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் பாஜக எம்பி மீது எந்த வழக்கு பதிவும் செய்யாததால், பாதிக்கப்பட்ட வீரர்கள் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
இந்த வழக்கினை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காவல்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் இந்த வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் கபில்சிபில், உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய போது, இந்த வழக்கானது சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளி அரசியல் பின்புலம் உள்ளவர் என்பதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்துவருவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக 72 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே விளையாட்டு துறை அமைத்த விசாரணை குழு அறிக்கை பொது வெளியில் வெளியிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.