ADMK: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பரபரப்பான நிலை உருவானது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். அவர் கரூர் பிரச்சாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் சாதாரண பாதுகாப்பை விட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு, மற்றும் சுகாதார வசதிகளை வழங்கத் தவறினர்கள். இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள் என கூறினார். அவர் மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அன்று இரவே கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியதைத் தடுக்கும் விதமாக நான் நேரடியாக விளக்கம் அளித்தேன். இனி இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது. மக்களின் உயிரே முக்கியம்,என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதியதாக இல்லை, என விமர்சித்தார். அவர் முதலமைச்சர் அறிக்கையில் சில குறிப்புகளை நீக்குமாறு கோரினார். இதையடுத்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமளி அதிகரித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார் அமைதியாக இல்லையெனில் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி சட்டசபை வளாகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த பதற்றமான நிலையில், சட்டசபை வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.